சாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ? ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல் கவனித்துக் கொள்வதையே தன்னுடைய பிறவிப் பணியாகவும், பிறவிப் பிணிக்கு விமோசனம் தரும் ஸாதனா மார்க்கமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு ஸ்த்ரீக்கு வாஸ்தவமான, நிலைத்து நிற்கிற உள்நிரைவும், ஒயாத பறப்பு இல்லாத சாந்தி-நிம்மதிகளும் ஏற்படும். அவள் ஒருத்தியின் நிறைவோடு நிற்காமல் அவளுடைய சுத்தமான க்ருஹ நிருவாகமே குடும்பத்தையும் ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும். இப்படி தனி மநுஷ்யர்கள் அடங்கிய குடும்பம் ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால், பல குடும்பங்கள் அடங்கிய நாட்டிலும் தன்னால் ஒழுங்கு ஏற்படும். தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.
அப்படிச் சொன்னால் இக்காலத்துப் புதுக் கொள்கைக்காரர்களாக இருக்கிற எல்லோருக்கும் கோபம் கோபமாக வருகிறது. ‘இதெல்லாம் சாஸ்த்ரங்களை எழுதிய கொடுங்கோல்காரப் புருஷர்களின் வழியிலேயே போய், பெண்கள் புருஷர்களுக்கு ஸரிநிகர் ஸமானமாக எழும்பவிடாமல் அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி வைக்கிற உபாயமே. ஸ்த்ரீ தர்மம் – புருஷ தர்மம் என்று பேதமேதும் இல்லை. மநுஷ்ய ஸமுதாயம் முழுதற்கும் ஸமமான ஒரே தர்மந்தான்’ என்று அவர்கள் எங்களைக் கண்டனம் செய்கிறார்கள்.
ஆனால் பதட்டப்படாமல் கொஞ்சம் ஆய்ந்து ஓய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.
இங்கே ஸமத்துவப் போட்டி, போராட்டங்களுக்கு இடமே இல்லை. ஒரு தினுஸான கார்யம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்றும் இல்லை. வெளிக்கார்யம் பண்ணி ஸம்பாதிப்பது, ஸம்பாதித்ததைக் கொண்டு வீட்டுக் கார்யங்களைப் பண்ணுவது ஆகிய இரண்டுமே மனித வாழ்க்கைக்கு அத்யாவச்ய மானவைதான். அப்படி இரண்டு தினுஸாகத்தான் பதி-பத்னிகளுக்கு தர்ம சாஸ்திரம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. மந்திரி இலாகா உதாரணம் சொன்னேனே, அதிலே ஒரு புது ஏற்பாடாக, Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’ என்றும், Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்:
ஸ்த்ரீகளுக்கே க்ருஹத்துக்கான ஸகலமும் வாங்கிப் போட்டுச் செலவு செய்வதற்காகத் திட்டம் போடும் அதிகாரத்தை தர்ம சாஸ்த்ரம் ஸ்பஷ்டமாகத் கொடுத்திருக்கிறது. அவன் உழைத்து ஸம்பாதனம் பண்ண வேண்டியது; அவளே தக்க ஆலோசனையுடன் அதைக் கொண்டு எல்லாச் செலவுகளுக்கும் திட்டம் போட்டு க்ருஹத்தை நிர்வஹிக்க வேண்டும் – இப்படி சாஸ்த்ரம் சொல்வதிலிருந்தே ஸ்த்ரீகள் தங்களுக்கென்று ஒரு ஸ்வதந்திரம், அதிகாரம் இல்லாமல் அடக்கி நசுக்கி வைக்கப்படவில்லை என்று புரியும்.
இப்படி இரண்டு விதப் பணிகள் இருப்பதில் ஒன்றுதான் உசத்தி, மற்றது தாழ்த்தி என்ற மாதிரி அபிப்ராயங்கள் ஏன் எழும்ப வேண்டும் ? ஆனபடியால், வெளிலோக கார்யத்தில் ஈடுபட்டிருக்கும் புருஷனுக்குத்தான் உசந்த ஸ்தானம், அகத்துக் கார்யத்தோடு நின்றுவிடுகின்ற ஸ்த்ரீக்குத் தாழ்ந்த ஸ்தானம் என்று எண்ணவேண்டிய அவசியமேயில்லை. (சிரித்து) அவனுக்கு வெளி உத்யோகமானால், அவளுக்கு உள் உத்யோகம்! அந்த உள் உத்யோகத்தை, ‘அடுப்பங்கரைச் சாக்கிலி’ என்று மட்டமாக நினைக்காமல் Domestic Management Executive என்று நினைத்துவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும்; ஸரிநிகர் ஸமானமும் ஆகிவிடும். இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள்? கூலிக்கு வேலை செய்வதைவிட ‘ஆனரரி’யாகச் செய்வதில் ‘ஆனர்’ ஜாஸ்திதானே? அதாவது அதன் ஸ்தானம், கூலிக்குச் செய்வதை விட உசத்திதானே? அதுவும் ஆறு மணி, எட்டுமணி வேலை, வாராந்தர விடுமுறை என்ற ‘கண்டிஷன்’கள் இல்லாமல், தூங்குகிற நேரம் போக ஸதாகால கெளரவ உத்யோகம்! இப்படிப் பார்த்தால் ஸம ஸ்தானத்துக்கு ரொம்பவும் மேலேயே போய்விடுகிறதல்லவா? வேடிக்கைக்கு சொன்னேன். இங்கே ஸம-அஸமப் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்! ச்வாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது? அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும்.
