Sage of Kanchi

அவன் திட்டினானா?

what is great about Sri Bharani mama is his tolerance to all insults just because Periyava told him to do this…PeriyavaVilvamSide-645x960

நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் மெயின் ரோடையொட்டி தத்தாஜி என்று ரிசெர்வ் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர் இருந்தார்.அவாத்துலதான் பெரியவா வந்தா பூஜையோட தங்குவா. காலையிலே விஸ்வரூபதரிசனம், பிறகு பூஜை, மதியம் ஊரைச் சுற்றி பலருக்கு ஆசி கூற கிளம்பி விடுவார்.

தத்தாஜி மாமா கைங்கர்ய சபாவின் தலைவர். வீடு வீடாகச் சென்று மாதம் ரூபாய் ஒன்று வசூல் செய்து, ஏழைகளுக்கு திருமணத்திற்கு, உபநயனம் என்று நல்ல கார்யங்களுக்கு செலவு செய்வார். புண்யம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நானும், எனது நண்பன் வைத்தியநாதனும் அடிக்கடி பெரியவாளை தரிசனம் செய்ய செல்வோம்.

ஒருநாள், திடீரென்று பெரியவா எங்களை கூப்பிட்டு, “வீடு வீடாக குடித்தனம் குடித்தனமாக போய் ஒரு ரூபாய் ஒன்று கலெக்ட் செய்து தத்தாஜி மாமாவிடம் குடுங்கோ. இந்தப் பணம் வேதத்திற்காக மட்டும் செலவு செய்ய வேண்டும். இப்போ ஆஸ்ரமத்தில் வேத சம்மேளனம் நடக்கப்போகிறது. சீதாராமய்யர் அதன் பொறுப்பைப் பார்க்கட்டும். நீங்கள் இருவரும் கட்டாயமாக எல்லோரிடமிறிந்தும் வசூல் செய்யணும். இதன் பலன் எல்லாருக்கும் கிடைக்கணும். திட்டுவா, அடிக்க கூட வருவா, ஆனா நீங்க பொறுமையா, பதில் பேசாமல் பெரியவா சொல்லியிருக்கான்னு மட்டும் சொல்லி வசூல் செய்யணும். என்ன புரியறதா?” என்று சொன்னார்.

நாங்களும் “சரி” என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். அநேகமா யாவரும் மறுக்காமல் பணம் கொடுத்தனர். ஒரு சிலர், “நாளை வாங்கோ” என்று சொன்னார்கள். இந்தப் பொறுப்பிலே, நாங்கள் ஒரு ஆயுர்வேத டாக்டர் வீட்டிற்கு சென்றோம். பணம் கேட்டோம். அவர் திட்ட வட்டமாக மறுத்தது மட்டுமில்லாமல் வாயில் வந்தபடி திட்ட ஆரம்பித்தார். பிடிவாதமாக நாங்கள் முயற்சி செய்தோம்.

அப்போது, ராமா கல்யாண மண்டபத்திலிருந்து தள்ளு வண்டியிலே பெரியவா தாரை, தம்பட்டை ஓத வரும் சப்தம் கேட்டது. சொல்லி வைத்தாற்போல நாங்கள் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். டாக்டர் உடனே பூர்ண கும்பத்துடன் பெரியாவளை வரவழைக்கலானார். தட்டிலே அரிசி வைத்து பூர்ண கும்பம், அதிலே ரூ 100/- இருந்தது. என்ன ஆச்சர்யம். பெரியவ பக்கத்திலே இருந்த ஒரு சிப்பந்தியிடம் அந்த ரூ 100/- எடுத்து எங்களிடம் குடுக்க சொன்னார். “டே, பசங்களா, நீங்க இருந்து ரசீது கொடுத்துட்டு வாங்கோ” என்று உத்தரவிட்டு இடைத்தை விட்டு நகர்ந்தார். அப்போதுதான் புரிந்தது டாக்டருக்கும் நாங்கள் நிஜமாவே பெரியவா சொல்லித்தான் வசூலுக்கு வந்திருக்கிறோம் என்று. இது முடிந்து மடத்துக்கு சென்றோம். பெரியவாளிடம், ” இன்னிக்கி ரூ 500/- வசூல் ஆகியது” என்று தெரிவித்தோம்.

பெரியவா கேட்டார், “அவன் திட்டினானா?”

நான் உடனே, “இல்லை இல்லை தருவதாகத்தான் சொன்னார். அதுக்குள்ளே நீங்க வந்துட்டேள். அதனாலே ரூ 100 கிடைத்தது” என்றேன்.

உண்மையிலே, பெரியவா மனதுக்குள்ளே சந்தோஷப்பட்டு, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார். எங்களுக்கு வேறு என்ன வேண்டும் ஆசி மட்டும்தானே…..

-இன்னும் வரும்…..

Exit mobile version