Sage of Kanchi

Namo Narayanaya!

 

csimg19

“இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!”

காஞ்சிக்கு பக்கத்தில் கீழம்பி என்ற கிராமம். பெரியவா வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரோடு பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யாரும் நடந்து வந்தார். அவர் பெரிய வைஷ்ணவ தலைவர். வைஷ்ணவ சம்பிரதாயங்களை துளிகூட குறைவில்லாமல் அனுஷ்டிப்பவர். எல்லாவற்றுக்கும் மேல், பெரியவாளிடம் ஹிமாயலய பக்தி !

வரப்பின் மேல் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தபோது, அண்ணா ஸ்வாமி கைகளைக் கூப்பிக் கொண்டு “தேவரீர், ஒரு நிமிஷம் அப்பிடியே நிக்கணும்……….” என்று வேண்டினார்.  பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு கணிகண்ணன் பின்னால் போன ஜகன்னாதன்  பக்தரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்ற அப்படியே நின்றார்.

வரப்பை ஒட்டி வாய்க்காலுக்கு போய்க் கொண்டிருந்த ஜலத்தை, இரு கைகளாலும் அள்ளி பெரியவாளின் திருப்பாதங்களில் வார்த்தார். கொஞ்சம் கூட அசையாமல் நின்றார் பெரியவா. பாத தீர்த்தத்தை எடுத்து தன் தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டு, சிறிது அருந்தினார். எப்பேர்ப்பட்ட பாக்யசாலி!

“இது ப்ரத்யக்ஷ நாராயணனோட பாத தீர்த்தம்! இன்னிக்குத்தான் அடியேன் தன்யனானேன்!” என்று மனஸ் நெகிழ்ந்து கூறிவிட்டு ” தேவரீர்…மன்னிக்கணும். தாமசப்படுத்திட்டேன்……..” என்று பணிந்தார்.  அண்ணா ஸ்வாமி எப்போதுமே பெரியவாளுடைய இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டுதான் வந்தனம் பண்ணுவார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரத்தன்று மடத்திலிருந்து ஒரு மூட்டை அரிசியும், பத்துக்கு ஆறு வேஷ்டியும் பெரியவா அனுப்புவது வழக்கம். விளம்பரமே இல்லாமல் பெரியவாளிடம் பக்தி செலுத்தியவர்கள் ஏராளம். உண்மையான சைவர்கள், பெரியவாளை சிவனாகவும், உண்மையான வைஷ்ணவர்கள் பெரியவாளை விஷ்ணுவாகவும் பக்தி பண்ணியிருக்கிறார்கள்.

பூரணமான ப்ரஹ்மம்தானே பெரியவா!

Exit mobile version