Site icon Sage of Kanchi

Kindness to animals….

Whenever I see deer hit by cars here in US, I think the same way – all these were their lands and we occupied and poor animals are now run over by our cars etc!

மடத்துக்கு சொந்தமான நிலத்திலிருந்து வேர்க்கடலை அறுவடையாகி வந்தது. அத்தனை மூட்டைகளையும் மானேஜேர் எப்போதும் போல் விலைக்கு விற்றுவிட்டார்.  பெரியவா திடீரென்று வேர்க்கடலை வந்ததை நினைவில் வைத்துகொண்டு  “இருக்கிறதா” என்று கேட்டனுப்பினார்.  சிப்பந்திகளுக்கு கூட வைக்காமல், அத்தனையும் வித்தாயிற்று என்று சொல்ல மானேஜருக்கு பயம். அதனால் ஆட்களை அனுப்பி, களத்தில் தர்மத்துக்கென விட்டு வந்ததை பொறுக்கி கொண்டு வர சொன்னார்.

ஆனால் ஆட்கள் போனபோது, களம் அடியோடு காலி.  அந்த அசகாய சூரர்கள், அதற்காக  சும்மா திரும்பி வரவில்லை. வயலிலிருந்த எலி வளைகளை துளைந்து பார்த்தார்கள்!  அவற்றில், ஓரளவு ஒரு மூட்டையே கிடைத்தது! சந்தோஷமாய் எடுத்து வந்து சன்னதியில் சேர்த்தார்கள்.

“இது ஏது?” அயனான கேள்வி ஐயன் வாயிலிருந்து வந்தது.

“அஸ்வத்தாமா ஹத; குஞ்சரஹ;” பாணியில், “நம்ம நிலத்துலேர்ந்துதான் கொண்டு வந்தது” என்று பதில் சொன்னார்கள்.

ஆனால் அங்கே உலகம் “அசடு” என்று கருதும் ஓர் உண்மை விளம்பியும் இருந்தான். அவன், “நெலத்துல இருந்த எலி வங்குலேர்ந்தாக்கும் இத்தனை கடலை தோண்டி எடுத்தது!” என்று கக்கிவிட்டான். பெரியவாளுக்கு அது சற்றும் ஏற்கவில்லை. “பாவம்! அல்ப ஜீவன்கள் ஏதோ தங்க வயித்துக்காக எடுத்துண்டு போய் சேமிச்சு வெச்சதயா நாம சூறயாடிண்டு வரது?”

மானேஜரை கூப்பிட்டார். “இந்த வேர்க்கடலயோட இன்னம் பொட்டுக்கடலையும் வெல்லமும் கலந்து, அந்த எலி வங்குக்குள்ளேயெல்லாம் போட்டுட்டு வரணும். உடனே ஏற்பாடு பண்ணு”

வேர்க்கடலை பறிமுதல் பண்ணினதுக்கு, தாக்ஷிண்ய தக்ஷிணையாக பொட்டுக்கடலையும், வெல்லமும்! பாகின் மூலச்சரக்கும், பருப்பும் கலந்து கரிமுகத்தூமணியின் ஊர்திக்கு படைக்கிறார் நம் அருள் பாட்டனார்!

————————————————————————————————

மகாராஷ்ட்ரத்தில் ஓரிடத்தில் பெரியவா முற்றிலும் அந்தர்முகமாக ஜபயோகத்திலிருந்தபோது, ஒரு பெரிய கருநாகம் அவருக்கு பின் பாங்காக குடை பிடித்துகொண்டிருந்தது. இன்று இதை படிக்கும் நாம், நாகம் குடை பிடிக்கும் லிங்கபிரானாக,  ஸ்ரீமன் நாராயணனாக பெரியவா தரிசனம் தந்தார் என்று பாடலாம். ஆனால், இன்று நேரில் கண்ட இரு தொண்டர்களுக்கோ குலை நடுக்கம்தான்!  தாங்கள் சிறிய அதிர்வை உண்டாக்கினாலும் நாகம் குருநாதனை தீண்டிவிடக்கூடுமே என்பதால் அலமாந்து “ஈஸ்வரோ ரக்ஷது;” அவரே அவரை ரக்ஷது;” என்று விட்டுவிட்டனர். நல்ல காலமாக படத்தை விட்டு விட்டு, பாம்பு ஒரு துவாரத்தின் வழியாக போய் விட்டது.

பெரியவா ஜபம் முடிந்து எழுந்ததுதான் தாமதம்! பாரிஷதர், அந்த துவாரத்தை அடைக்க முற்பட்டார்.  பெரியவா காரணத்தை வினவினார். பாரிஷதர் நடந்ததை சொன்னார்.

“அதுக்காக? நாம என்னமோ நேத்திக்கு வந்தோம். நாளைக்கே இங்கே விட்டுட்டு போய்டுவோம். நாம வரதுக்கு முன்னாடியும், பின்னாடியும் இந்த எடம் என்னென்னவோ ஜீவராசிகளுக்கு வாசஸ்தலமா இருந்தது, இருக்கப்போறது! நடுவாந்த்தரத்துல நாம அதுகள் எடத்துல வந்து பூந்துண்டது போறாதுன்னு………….நம்மாத்துக்குள்ள வந்து பூந்துண்டவன், நாம உள்ளே வரப்படாதுன்னு கதவை அடைச்சா எப்டி இருக்கும்?”

துவாரத்தை அடைப்பதை தடுத்துவிட்டார்.  “நமக்கு அது ஒரு ஹிம்சையும் பண்ணாதபோதே, “இனிமே பண்ணும்”ன்னு இப்பவே நாம நெனச்சுண்டு அதுகளை ஹிம்சை பண்ணினா எப்படி நியாயம்?”

Exit mobile version