பெரியவா இருந்த இடத்திலே இருந்து வெகு அருகில்தான் வரதராஜ பெருமாள் கோயில். அந்தக் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தபோது, பெரியவாளைத் தனியா வந்து அங்கே இருந்து யாரும் அழைச்சதா தெரியலே. அதையெல்லாம் பெரியவா எதிர்பார்க்கவும் மாட்டார். மாடவீதியிலேயே, உசரமான ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு, கோபுர தரிசனம் செய்தார். சந்நிதி தெரு சந்திக்கிற இடத்திலே ஜீயர் சுவாமிகள் இவரைப் பார்த்துவிட்டு, ”பெரியவா அவசியம் வந்து சேவிக்கணும்!” என்று கேட்டுக்கொண்டார். ஜீயர் கேட்டுக்கொண்டதற்காக, மறுபடியும் ஒருதடவை வந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் போனார் பெரியவா.
பெரியவா காலையில் எப்போது வெளியே கிளம்புவார் என்று யாருக்கும் தெரியாது; நினைத்தாற் போலிருந்து, திடீரென்று புறப்பட்டுவிடுவார். நாம்தான் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டும். ஒருநாள் விடியற்காலை 4 மணி இருக்கும். குள்ள சந்திரமௌலி படுத்துக்கொண்டிருந்தான். கதவு சாத்தியிருந்தது. பல் தேய்த்து சுத்தம் செய்துகொண்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கதவு நன்றாகத் திறந்து கிடக்கிறது. பெரியவாளைக் காணோம்!
எல்லோருக்கும் ஒரே பயமாகப் போய்விட்டது. பாடசாலை வெங்கட்ராம சாஸ்திரி பேரன், ‘நான் போய்த் தேடிப் பார்த்துட்டு வரேன்’ என்று புறப்பட்டான். சாலையில் டிரெயினேஜ் குழாய்கள் போடுவதற்காகப் பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். அதிகாலை நேரம். கும்மிருட்டு. மேடும் பள்ளமுமாக வீதி ரொம்பவும் மோசமாக இருந்தது.
திரௌபதி அம்மன் கோயில் பக்கத்தில் பெரியவா நடந்து போய்க்கொண்டிருந்தார். வெள்ளையாக அகிம்ஸா பட்டு ஒன்றைப் போர்த்திக்கொண்டு, தண்டத்தை உள்ளே மறைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். பெரியவாதான் அது என்று ஓர் ஊகத்தில் தெரிய வந்ததும், அவன் அவரைத் தொடர்ந்து ஓடினான். வடக்கு மாட வீதியில்தான் அவரைப் பிடிக்க முடிந்தது. நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே… அவர் நடை வேகத்துக்கு இணையாக நம்மால் எல்லாம் நடக்கவே முடியாது!
பெரியவாளுக்கு பள்ளம், மேடு எல்லாம் ஒன்றும் தெரியாது. கூடப்போகிறவர்தான் அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்த பெரியவா, மேடாக இருந்த ஓர் இடத்தில் கால் தடுக்கிவிடாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக, அருகிலே ஓடிய சாஸ்திரி பேரன் அவரை நெருங்கி, ‘பெரியவா, படி, படி!’ என்று எச்சரிக்கை செய்தான். திடீரென்று அவனைப் பார்த்த பெரியவா, ‘என்னடா நீ, இந்த வயசிலே போய் என்னைப் படி, படின்னு சொல்றியே… படிக்கிற வயசா எனக்கு?’ என்று குறும்பாகக் கேட்டார். பெரியவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்!’
******
Thanks a ton to Shri Bhaskaran Shivaraman who posted this in Sage of Kanchi group in Facebook.
