Sage of Kanchi

நிவேதயாமி

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துகொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.

பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம். வீட்டிலே இருந்தால், ‘மஹா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை சுவாமிக்கு காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அனுபவிப்பதற்காக பிரபஞ்சம் முழுவதையும் போக்கிய வஸ்துகளை வெளியில் உண்டாக்கி, அவற்றை அனுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திரிக்கிறார்.

எனவே நாம் அனுபவிப்பதை எல்லாம் அவருக்கு சமர்ப்பித்து விட்டே உபயோகித்து கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தை கொடுத்து விடுகிறோம். வெறுமே அவரிடம் காட்டுகிறோம். பிறகு நாம் தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் சுவாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாக கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர அவருக்கு இதனால் எதுவுமில்லை.

“நிவேதயாமி” என்றால் “அறிவிக்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர “உண்பிக்கிறேன்” என்று அர்த்தமில்லை. “அப்பனே, இந்த வேளைக்கு உன்னுடைய கருணையில் நீ இந்த அன்னத்தை கொடுத்திருக்கிறாய்!” என்று அவனுக்கு தெரிவித்து விட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.

அவனை பூஜை என்று வைத்து கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம். என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இந்த பக்குவம் நம்மை நல்லவர்களாக்கும்.

Exit mobile version