Sage of Kanchi

எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.
நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்’ இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.

Exit mobile version