கடந்த 2018 அடியேன் கோமளலக்ஷ்மி மஹராஷ்டிர ஷேகான் என்ற திருத்தலத்தில் ஆக்ட்டிங் பிரின்சிபால் ஆக பதவி கிடைத்து முதன் முதலில் கோயம்பத்தூரினை விட்டு வட மாநிலம் செல்லும் பாக்கியம் பெற்றேன். அங்கிருந்து தான் இந்த மஹாபெரியவாளின் அனுகிரக வைபவம் தொடங்கியது.
எனது கனவில் வந்து விளக்கங்கள் கூறி என்னை வழிநடத்தி வந்தார்.தமிழும் ஆங்கிலமும் தவிர்த்து வேறு எதுவும் தெரியாத நிலையில் பயணம் தொடங்கி மீண்டும் கோயம்பத்தூர் வரும் வரையில் ,இன்று வரை இந்த நொடி வரை மஹாபெரியவாளின் வழிகாட்டுதல் என்னும் வைபவம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது அவை நிமித்தங்களாக என்னால் உணரப்படும் அளவிற்கு என்னோடு பயணம் செய்து வருகிறார் . இரண்டாவது ,மஹாராஷ்டிராவில், நர்மதை நதி ஸ்பரிசம், ஒம்காளேஸ்வர தர்சனம் , உஜ்ஜயினி மஹாகாளி தர்சனங்கள் என்வாழ்வில் எண்ணமுடியாத ஆன்மீக அருளாசிகள்.
மூன்றாவது ஸ்ரீ வைஷ்ணவர், எனது தகப்பனார் தனக்கு ஒரு சாலிகிராமம் வேண்டும் ,முடிந்தால் வாங்கி வரவும் என்று தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். மொழி தெரியாத ஊரில் கடைசி நாள் வேலைக்கு விடுப்பு எடுக்க முடியாத நிலையில், சாலிகிராமம் பற்றி பிறரிடம் சொல்லக்கூட நேரம் வாய்க்காத நிலைப்பாட்டில் முடியாது என்ற திடமான முடிவுடன் உறங்கச்சென்றோம்.
மஹாபெரியவா எனது கனவில் வருவதும் விளக்கம் தருவதும் இந்த மூன்று மாத காலங்களில் வாடிக்கையான ஒன்றாகிப்போவிட்டதால், பெரியவா இதுக்கு என்ன விளக்கம் தரப்போகிறீகள் ?என்று வழக்கம் போல் எனது கேள்வியினை மனதிற்குள் கேட்டு விவாதிக்கத்தொடங்கினேன். பதில் தரும் நிமித்தங்கள் ஒன்றும் தோன்றாத நிலையில் வாசல் அழைப்புமணி ஒலித்தது. . நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர் அந்த ஊரின் தலைமை செல்வந்தர் ,அன்றைய இரவு சுமார் 9.30 மணியளவில் எங்களை காணவும் வழி அனுப்பவும் வந்தார்.அவர்களை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவரிடம் பேசும் பொழுது மஹாபெரியவா இடைப்பட்டார். இவரிடம் கேளேன்? என்னாவது பார்க்கலாம் என்று எனக்கு ஒரு கட்டளை கிடைத்தது. எனது அறிவியல் மனதும், சங்கோஜமும் ,கேட்க விடாமல் தடை செய்தது. ஆயிற்று வந்தவரும் விடை பெற்று செல்ல எழுந்தார். ஆனாலும் என்னால் கேட்க முடியவில்லை. மஹாபெரியவாளிடம் சாரி பெரியவா? நீயே வேணா சொல்லு ? நானா கேட்டா சரியாவரும்னு தோணலை என்று மனதிற்குள் பெரியவாளிடம் மன்னிப்புகோரினேன்.
வீட்டு ஓனரும் என்னை பார்த்து ஒன்றுமே தங்களின் நட்புக்கு செய்யவில்லை . எதாவது வேண்டுமானால் கேளுங்கள் நாளை மாலை ஸ்டேஷனில் ட்ரெயின் கிளம்புமுன் கொண்டு வந்து தருகிறேன் என்று வற்புறுத்தினார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை எனக்கு ? எனக்குள் மஹாபெரியவா தான் பேசியிருக்கணும்னு தோன்றது. சாலிக்ராம மூர்த்திகள் நர்மதையில் கிடைத்தால் எனது தகப்பனாருக்கு எடுத்து செல்லுவேன். அவ்வளவு தான் . என்னால் அறுதியிட்டு தரமுடியாத பொருளை கேட்டுவிட்டேர்களே. வேண்டுமானால் நேபாளம் செல்வோரிடம் சொல்லி நல்ல சாலிக்ராமமூர்த்தி வாங்கி கொரியர் பண்ணி விடவா? என்று கேட்டார்.
இதற்கு என்ன பதில் சொல்லுவது ? தெரியவில்லை? சொல்லுங்கோ மஹாபெரியவா என்று மனதில் கூறி பதிலேதும் வராததால் என் பெற்றோரிடம் கேட்டு நாளை காலை தொலைபேசியில் தகவல் தருகிறேன் என்று பதிலளித்து விட்டேன். அவரும் சென்று விட்டார்.
வழக்கம் போல் மஹாபெரியவாளிடம் என்னை ஏன் கேட்க வைத்தீர்கள்? பேசாமலிருந்திருந்தால் அமைதியாக கடைசிநாள் நன்றாக முடிந்திருக்கும். என்று விவாதம் செய்துவிட்டு உறங்கிபோனேன்.
விடியல் வந்தது! கண்களில் கண்ணீர் வந்தது! என்னவாயிருக்கும்?
வாசலில் ஒரு மனிதர் எப்படா கதவு திறக்கும் என்று காத்துஇருந்தவர் போல உடனே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் வீட்டு உரிமையாளர் அனுப்பி வந்தவர். சாலிக்ராம மூர்த்தி கிடைக்க ஏற்பாடு நடந்தாயிற்று மாலைக்குள் தங்களுக்கு கைகளில் கிடைத்துவிடும் என்று தகவல் சொல்ல சொன்னார் முதலாளி அம்மா ” என்று கூறினார். அவ்ளவுதான். சாலிக்ராம மூர்த்தி கிடைத்தது போல் ஒரு பரவசம். என்னுடனே எடுத்து வந்து என் பெற்றோருக்கு தருவது ஆனந்தம் .
நல்லது என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு நானும் எனது கடைசி நாள் பணிக்கு என்னை ஆயத்தப்படுத்திக்கொண்டேன் .
மஹாபெரியவாளிடம் தர்க்கம் செய்ய நேரம் இல்லை.
ஆயிற்று ! மாலை பதிவேட்டில் கைஓப்பம் போட்டாயிற்று ! வீட்டுக்கு போதும் நேரம் வந்தாயிற்று ! பணி புரியும் இடத்தில் அனைவரும் ஸ்டேஷனுக்கு வருவது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. சரி . நாமளே வந்தோம் ! நாமளா தான் போகணும். வழியனுப்ப யாரையும் எதிர்பார்க்கக்கூடாது! கேட்கவும் கூடாது. என்று எண்ணி அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தாயிற்று.
மனம் மிகவும் இறுக்கமாக இருந்தது. அழுகை வந்திடும் போல் இருந்தது. அழக்கூடாது என்று மூச்சை அடக்கி ஆட்டோவில் ஏறி ஸ்டேஷனிற்கு செல்ல ஆட்டோ புக் பண்ணும் நேரம் வந்தது. பக்கத்துக்கு வீட்டில் இருந்து ஒரு தகவலும் இல்லை. நேற்றைக்கே வழி அனுப்பி விட்டார்கள். இனி என்ன செய்வது? அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. வீட்டு உரிமையாளர் மகன் ஓடி வந்தார். எனக்கோ ஆச்சர்யம் . சாலிக்ராமமூர்த்தி வந்துட்டாரோ? மஹாபெரியவா நீக்க ஜெயிச்சுடீங்க? நீங்க தான் எப்பவும் கரெக்ட் .என்று முதல் தடவையாக பெரியவாளின் சிந்தனை வந்தது.
வந்தவர் ஒன்றும் கொண்டு வரவில்லை. ட்ரெயின் இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறதாம். அம்மா தங்களை காத்திருக்க சொன்னார்கள். என்னடா இது? இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமா? வேறு வழியில்லை என்று காத்திருந்தோம்? இந்த நேரம் எனது மனதில் மஹாபெரியவளை தவிர வேறு யாரேனும் இருப்பார்களா?
என்ன அற்புதம் செய்திருக்கிறீர்கள்? செய்யபோகிறீர்கள்? சாலிக்ராமமுர்த்தியே வேண்டாம் .நல்லபடியா என்னை ஊருக்கு அழைச்சுண்டு போங்கோ அதுவே போதும். நானும் அழக்கூடாதுனு பாக்கிறேன். அழவெச்சிடாதீங்கோ.
எல்லாரும் தவிச்சுண்டிருக்கா. என்று எனது அழுகை படலத்துடன் கூடிய புலம்பல் புராணம் ஆரம்பித்தாயிற்று .
சரியாக ஒருமணி நேரம் கழித்து உரிமையாளர் மகனே என்னை ஸ்டேஷனிற்கு அழைத்து செல்ல தயாரானார்.
கண்களில் கண்ணீர் ! ஆண்ட்டி ! அம்மா இந்த கிப்ட் பார்ஸலை போகும் பொழுது தங்களிடம் கொடுக்க சொன்னார் என்று ஒரு அன்பளிப்பு பெட்டி தந்தார்.
புரிந்து விட்டது. கண்களில் கண்ணீர். இது யாருக்காக? யாரால்? பக்தர்களுக்கு புரிந்திருக்கும். பிரித்துப்பார்க்க நேரம் இல்லை. ஸ்டேஷன் வந்தாயிற்று .ரயில் வர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். பிரித்துப்பார்க்க விரும்பி பிரித்துப்பார்த்தேன். ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர. சாட்சாத் சாலிக்ராமமுர்த்தியே தான் ஒன்றல்ல இரண்டு. பகவானே ! கருணாமூர்த்தியே ! சடாரென்று மூடிவைத்துவிட்டு பத்திரமாக கைப்பையில் வைத்து நிமிர்ந்தேன். ஒரே ஒருக்ஷணம் மஹாபெரியவா கண்களில் ஒளிர்ந்தார். அவ்வளவு தான் இனிமே அழுகை வருமா? வரலை. அலுவலகத்திலிருந்து அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நேர தாமதம் அறிந்து கிட்டத்தட்ட பத்து பேருக்கும் மேல் வந்து கூடிவிட்டார்கள். அடடா அழக்கூடாது. இந்தமுறையும் மஹாபெரியவா தான் ஜெயிச்சா! அழுதேன் அழுதேன்! கண்ணீர் வருவது நிற்கவேயில்லை. எல்லோரும் என்னை போற்றி புகழ்ந்து வாழ்த்தி வழியனுப்பி அனைத்து வைபவங்களுக்கு முடியும் வரை கண்ணீர் நிற்கவேயில்லை.. ரயில் புறப்பட்டு கைகாட்டி, வெகுநேரம் வரை படபடப்பு ஓயவில்லை .
பிறகு நிறுத்தி நிதானமாய் பெரியவாளை நினைத்து போற்றி புகழ்ந்து துதித்து வணங்கி தொழுது அழுது மீண்டும் ஒரு முறை சாலிக்ராமமுர்த்திகளை கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டேன். அன்று முதல் இந்த நொடி வரை அவரின் அனுக்கிரஹம் எங்கள் எல்லோரின் கண்களில் ஆனந்த கண்ணீரை மெய்சிலிர்க்க வைத்து வழிநடத்துகிறது.
வீட்டு உரிமையாளர் முந்தைய நாள் இரவு வந்தது முதல் அடியேன் வீட்டிற்கு வந்து சாலிக்ராம மூர்த்திகளை என் பெற்றோரின் திருப்பாதங்களில் சம்பர்ப்பித்து அவர்களுக்கு எண்ணமுடியாத அதிசயத்தினை விளக்கி , கதையல்ல நிஜம் என்று என் குழந்தைகளிடம் விளக்கி வீட்டில் எனது தாயார், சேர்த்து வைத்துள்ள ஆன்மீக புத்தகங்களை தேடி எடுத்து, ஒரு மஹாபெரியவா புகைப்படத்தினை கண்டெடுத்து, துடைத்து, சுவரில் ஒட்டி, விளக்கேற்றி ,பிரிட்ஜ் திறந்து , பூவைத்து, கல்கண்டு நெய்வேத்தியம் செய்யும் பொழுது தான் எங்கிருந்தோ வந்த சுகந்த பரிமள வாசனை மஹாபெரியவளின் இருப்பினை எங்களுக்கு உணர்த்தியது.யாரு இந்த அர்த்த ராத்திரியில் ஊதுபத்தி ஏற்றுவார்கள். நாமும் ஏற்றவில்லை. நறுமணம் எந்திருந்து வருகிறது.ஒரே ஆராய்ச்சி. அனைவரின் பேச்சினையும் அடைத்து கண்களில் கண்ணீர் வரவழைத்த சுகந்த வாசனை !மஹாபெரியவா தான் .எல்லோர் கண்களிலும் கண்ணீர்.எல்லாரும் ஒரு மனதாய் இது மஹபெரியவாளின் திவ்ய அனுகிரகம் தான் என்று ஏகமனதாய் மெய்சிலிர்த்து பரவசம் அடைந்தோம் . பின்னர் எல்லோரும் கரம் குவித்து வணங்கி தான் பூஜை பூர்த்தியாயிற்று.
என் தகப்பனார் எவ்வளவு பாக்கியசாலி. அவருக்கு மஹாபெரியவா சாலிக்ராமமுர்த்தி அருளிச்செய்து சாலிக்ராமமுர்த்தியாக எங்கள் இல்லத்தில் எழுந்தருளி குருவாகி வழிநடத்தி வரும் வைபவம் இன்றும் என்றும் என்றென்றும் .
ஏதேனும் ஒரு இடத்தில் மஹாபெரியவாளை நாம் பார்க்க நேர்ந்தால் போதும். ஈர்த்து நம்மை ஆட்கொள்ள அவர் காத்திருக்கிறார். என்பது சர்வ நிச்சயமான உண்மை ! Dr J.KOMALALAKSHMI ,COIMBATORE .
Looking forward,
Dr.J.Komalalakshmi B.Sc.,M.C.A.,M.Phil.,PH.D.,B.Ed,(Spl. Edu)M.ED .
