
நேபாள க்ஷேத்ரத்தில் மிக விஷேஷமான ஶிவ க்ஷேத்ரமான ஶ்ரீபஶுபதிநாதத்தில் உபாஸிக்கப்படும் க்ரமங்களைப் பற்றிய விஷயங்களைப் பற்றி படிக்க நேரிட்டது. அப்போது மஹாப்ராஸாத வித்யையும், ஶ்ரீசக்ராவரண க்ரமுமே பஶுபதிநாதத்தில் உபாஸிக்கப்பட்டு வருவது தெரிந்தது.
இதைப் பற்றி அடியேனுடைய நண்பர் ஶ்ரீவித்யோபாஸனையில் மிகவதிக ஞானம் உள்ளவர், நேபாளத்தில் பூஜிக்கும் பூஜகரைத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறிய பதில்
“பஶுபதி நாத் எனும் இந்த புண்யலிங்கத்தில் அனாதி காலமாக ஸ்வாமியின் பஞ்சமுகங்களிலும் ஈசானாதி பஞ்ச மூர்த்தங்களை ஆராதித்துப் பின்னர், பஞ்சமுகங்களுக்கும் மேலே ஶ்ரீசக்ரத்தை கல்பித்து, ஶ்ரீசக்ராவரண பூஜையே நடக்கிறது” என்றார்.
மஹாப்ராஸாத பத்ததி ஸம்பந்தமான விஷயங்கள் உபாஸகர்களால் ரஹஸ்யமாக உபாஸிக்கப்பட்டு வருகிறது.
மஹாப்ராஸாத யந்த்ரத்திலும் அல்லது அது போல ஶ்ரீசக்ரத்தில் பதினாறு ஆவரணங்களை பாவித்துக்கொண்டு தக்ஷிணாசார ஶ்ரீவித்யோபாஸகன் தனது பூர்ணாபிஷேகத்திற்குப் பின்னர், இந்த க்ரமங்களைச் செய்ய வேண்டும் என்பது விதி.
ஆதலால், நேபாளத்தில் பஶூபதிநாத் க்ஷேத்ரத்தில், பஶுபதிநாதரின் பஞ்சமுகங்களுக்கும் மேல் ஶ்ரீசக்ர ஆவரண பூஜையும், இந்த மஹாப்ராஸாத பரா ஆவரண பூஜையுமே அனாதி காலமாக நடந்து வருகிறது என்பது தெள்ளிய உண்மை.
மேலும், ஶ்ரீசக்ர உபாஸனை அனாதி காலமாகவே பாரத வர்ஷத்தில் விளங்கி வருகிறது என்பது, பாரத தேஶத்தின் நான்கு திக்குகளிலும் விளங்கும் ஶ்ரீதேவி ஆலயங்கள் ஶ்ரீசக்ர ரூபமாகவே விளங்குவதைக் கொண்டே அறியாலாம்
தெற்கே கன்யாகுமரி ஶ்ரீஆதிஶங்கரர் ப்ரதிஷ்டித்த ஶ்ரீசக்ர மத்யத்திலேயே விளங்குகின்றாள். அம்பிகை பூர்ண துர்கா ஸ்வரூபம்.
மேற்கே கோல்ஹாப்பூர் ஶ்ரீமஹாலக்ஷ்மி. ப்ரத்யக்ஷ சண்டிகா பரமேஶ்வரி ஸ்வரூபமே தேவி என்பது அவள் ஸ்வரூபத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அங்கும் ஶ்ரீயந்த்ர ப்ரதிஷ்டையும், ஶ்ரீவித்யோபாஸனையும் விளங்குவதை அறியலாம்
வடக்கே காஶ்மீரத்தில் ஶ்ரீஶாரிகா தேவி ஸ்வயம்பூவாய் தோன்றிய ஶ்ரீசக்ரேஶ்வரத்தின் மத்யத்தில் விளங்கும் மஹாராஞ்ஞி
கிழக்கே பகவதி ஶ்ரீகாமாக்யா தேவி. மாதங்கியும், கமலாத்மிகாவும் இருபுறமும் விளங்க, ஶ்ரீராஜராஜேஶ்வரியாக ஶ்ரீகாமாக்யா விளங்குகின்றாள்.
ஆக பாரத வர்ஷமே மேலே விரிந்து, கீழே குறுகி த்ரிகோணமாக ஸாக்ஷாத் ஶ்ரீபராஶக்தியின் ஸ்வரூபமாகவே விளங்குவதால், அம்பிகை உபாஸனையே ஆதி உபாஸனையாக விளங்குவது தெள்ளெனத் தெரிகிறது.
நேபாளத்தில் உபாஸிக்கப்படும் ஶ்ரீமஹாப்ராஸாத வித்யையின் ஆவரணங்கள், முக்யமாக இந்த பத்ததி ஸுத்த தக்ஷிணாசாரத்தில் உபாஸிக்கப்படுவதும், ஶ்ரீசிதம்பர க்ஷேத்ரத்தில் கூட இந்த பத்ததிப்படி மஹாப்ரஸாத ஆவரணம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீவித்யோபாஸகன் ஊர்த்வாம்னாய பூஜை, அதராம்னாய பூஜைகள் முடிந்த பிறகு, இந்த மஹாப்ராஸாத க்ரமத்தை அனுத்தராம்னாய பூஜைக்கு முன் செய்ய வேணடும் என்பது விதி. மஹாப்ராஸாத யந்த்ரம் எனும் ஷோடஷாவரண யந்த்ரம் தனியாக இருந்தாலும், ஶ்ரீவித்யா உபாஸகன் தக்ஷிணாசாரத்தில் பூர்ண தீக்ஷை முடிந்த பின்னர், ஶ்ரீசக்ரத்திலேயே பதினாறு ஆவரங்களை கல்பித்து இந்த உபாஸனையைச் செய்ய வேண்டும் என்பதே விதி.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்