
ஆதிஶக்தியான ஶ்ரீஜகன்மாதா உறையும் பற்பல க்ஷேத்ரங்கள் இந்த பாரத வர்ஷத்தில் உண்டு!! எத்தனையோ க்ஷேத்ரங்கள் இவ்வுலகில் ரஹஸ்யமாக வெளியுலகிற்கு தெரியாமல் அதீதமான மஹத்வத்துடன் விளங்குகின்றது. அத்தகைய க்ஷேத்ரங்களில் ஆரணி அருகில் விளங்கும் முக்யமான க்ஷேத்ரம், காஞ்சிபுரத்திற்கு அடுத்து ஶ்ரீகாமாக்ஷி பாஶாங்குச தனுர்பாணத்துடன் விளங்கும் முக்யமான க்ஷேத்ரம் காமத்தூர் எனும் காமக்கூர்.
அருணகிரி நாதராலே திருப்புகழ் பாடல் பெற்ற முக்யமான க்ஷேத்ரம் காமக்கூர். ஸ்வாமி திருநாமம் ஶ்ரீஇளம்பிறைநாதர் எனும் ஶ்ரீசந்த்ரசேகரர். ஜகன்மாதாவோ ஶ்ரீஅம்ருதாம்பிகா எனும் நாமத்துடன் பொலிகிறாள்.
இங்கே ஆலயத்தின் ஈசான்ய மூலையில் ஶ்ரீகாமாக்ஷி அம்பாளுக்கு தனி ஆலய அமைப்பு விளங்குகின்றது. எல்லாவிடங்களிலும் அம்பாளுக்கு ஸிம்ஹ வாஹனமே விளங்கும். இவ்வூரிலோ ஶ்ரீஜகன்மாதா யாளி வாஹனத்தைக் கொண்டு விளங்குகின்றாள்.
தேவீ ஆலயத்தில் நுழைந்தால் உள்ளே ஒரு த்வார பாலகியரையே காண்கிறோம். மற்றொருவர் கால வெள்ளத்தில் திருடுபட்டு விட்டார். கர்ப்ப க்ருஹத்தினுள்ளே ஶ்ரீசக்ர ஸிம்ஹாஸனியான ஶ்ரீகாமாக்ஷி ஶ்ரீபீடத்திலே பத்மாஸனத்திலே பாஶாங்குச தனுர் பாணத்துடன் திருகாஞ்சிபுரமாம் பூகாமகலாகார க்ஷேத்ரத்தில் விளங்குவது போலே ஜ்வலிக்கிறாள்.
அம்பாளின் ஸாந்நித்யம் வாய் விட்டுச் சொல்ல முடியாது. ஸந்நிதிக்குள் நுழைந்ததுமே இனம் புரியாது ஆநந்தம் ஏற்படுகிறது. அம்பாளுக்குக் கீழே கருங்கல்லால் ஆன, கிட்டத்ட்ட ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான ஶ்ரீசக்ரம் விளங்குகின்றது. இன்னமும் பழமை குன்றாது துல்யமான ரேகைகளுடன் ப்ரகாசிக்கிறது ஶ்ரீயந்த்ரம்.
கோவிலில் பூஜிக்கும் ஶிவாச்சாரியார் அம்பாளிடம் மிகுந்த ப்ரியத்துடன் பூஜிக்கிறார். கடந்த எட்டு வருடங்களாக இக்கோவிலில் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷியினால் ஆட்கொள்ளப்பட்டு ஶ்ரீசந்த்ரஶேகரர் ஶ்ரீஅம்ருதாம்பாளுக்கும், பகவதி ஶ்ரீகாமாக்ஷிக்கும் விஶேஷ பூஜைகள் செய்து வருகிறார்.
ஶிவாச்சாரியார் ஆலயத்திற்காக ப்ரபல பணிக்கரிடம் ப்ரஶ்னம் போட்டு பார்த்தபொழுது பின்வரும் விஷயங்கள் ப்ரஶ்னத்தில் தெரிய வந்தது. அவை அந்தக் கோவிலின் ஶிவாச்சாரியாரின் அனுமதியின் கீழே பதிகிறேன்.
1) கொல்லூர் ஶ்ரீமூகாம்பாளின் ஆலயத்திலே ஶ்ரீயந்த்ர ஸ்தாபனம் செய்து ஶ்ரீமூகாம்பிகையை பூஜித்த பின்னர், தேவியின் உத்தரவில் பேரில் காமநகர் எனும் காமத்தூர் வந்து இவ்வாலயத்திலே பாலையின் வடிவத்தில் காக்ஷியளித்த ஶ்ரீகாமாக்ஷிக்கு அழகிய ஆலயத்தை நிர்மாணித்து தன் கரங்களால் ஶ்ரீயந்த்ரத்தை ப்ரதிஷ்டை செய்தார் ஶ்ரீஆதிசங்கர பகவத்பாதாள்.
2) ஶ்ரீகாமாக்ஷி தேவி ஸுதாஸாகார மத்யத்தில் ஶ்ரீமந்நகரத்தில் விளங்குவது போல் இந்த காமத்தூர் க்ஷேத்ரத்தில் அம்ருத குளத்தின் மத்தியில் விளங்குவது போன்ற அமைப்பு ஆதியில் இருந்திருக்கிறது.
3) ஆலயத்தில் விளங்கும் ஶ்ரீசந்த்ரசேகரரின் ஸாந்நித்யம் முழுவதும் ஶ்ரீசக்ர பிம்பத்தில் ஶ்ரீஆதிஶங்கரரால் ப்ரதிஷ்டிக்கப்பட்டதால், முதலில் ஶ்ரீகாமாக்ஷிக்கு பூஜை செய்த பிறகே ஶ்ரீசந்த்ரசேகரர் ஶ்ரீஅம்ருதாம்பாளுக்கு பூஜை நடக்க வேண்டும் என்பது ப்ரஶ்னத்திலே வந்துள்ளது.
4) ஆதிஶங்கரர் கல்லால் ஶ்ரீயந்த்ரம் வரைந்து அதற்கு மேல் ஶ்ரீயந்த்ரத்திற்கு ஸ்வர்ண கவசம் போர்த்தும்படி செய்துள்ளார். அந்த ஸ்வர்ண கவசம் கால வெள்ளத்தில் கொள்ளை போய் விட்டது.
5) இன்றும் ஸித்தர்களும், யோகீச்வரர்களும் இங்கே வந்து ஶ்ரீகாமாக்ஷியை உபாஸிக்கிறார்கள்.
மேலும், சித்ரா பௌர்ணமியன்று விசித்திரமான ஶப்தங்களும், பூஜை மணி ஓசையும், கால் சதங்கை சப்தமும் கேட்குமென்பதை அவ்வூர் மக்கள் கூறினார்கள்.
மேலும், நிறைய தடவை ஆலயத்தில் ஶ்ரீகாமாக்ஷி ஸந்நிதியில் சதங்கை சப்தம் கேட்பதையும் அவர்கள் கூறினார்கள்.
இப்போதைய ஆலயத்தின் முக்கிய தேவை, ஆலய வருமானம் மிகவும் சொல்பமே. புஷ்பத்திற்கும், நல்லெண்ணெய்க்கும் கூட சிரமப்படும் வகையில் தான் ஆலயம் உள்ளது. ஆகையால் முடிந்தவர்கள் ஆலயத்திற்கு புஷ்பம் மற்றும் நல்லெண்ணெய் முதலியவைகளுக்கு உதவி செய்வது ஶ்ரீபரமேச்வரரின் கடாக்ஷத்திற்கும், பகவதி ஶ்ரீகாமாக்ஷி கடாக்ஷத்திற்கும் பாத்திரர்களாக வழிவகுக்கும்
ஆலய ஶிவாச்சாரியார் எண் : ஶ்ரீமணிகண்டன் — 9486519555
கைங்கர்யம் செய்ய எண்ணமுடையவர்கள் மேற்கண்ட எண்ணிற்கு பூஜகரை தொடர்பு கொள்ளலாம்!!
முக்கியக்குறிப்பு : தேவ ப்ரஶ்னத்தின் படி தற்போது தேவி கோட்டமான ஶ்ரீகாமாக்ஷி ஸந்நிதியில் தொடர்ந்து ஶ்ரீதேவீ மாஹாத்ம்யம் எனும் ஶ்ரீதுர்கா ஸப்தசதீ பாராயணம் செய்ய உத்தரவாகியுள்ளது. குறைந்தபக்ஷம் நாற்பத்து எட்டு நாளாவது தற்போது செய்ய வேண்டிய சூழ்நிலை. வேலூர் மற்றும் ஆரணி அருகில் கோவில் உள்ளதால், எவரேனும் இதற்கு அருகிலிருப்போரை ஏற்பாடு செய்தால் ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையின் அனுக்ரஹத்திற்கு பூர்ண பாத்ரர்களாகலாம். முடிந்தோர் முயற்சி செய்க.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்