Sage of Kanchi

ஏன் திருவெண்காடு திருத்தலம் செல்ல வேண்டும்? Why should one go to Tiruvengadu?

I have been to this kshetram – but dont remember Rudrapadham – I must have missed to have darshan. Agoramurthi vigraham would be absolutely magnificient! Great info shared by Sri Sitaramn Subramanian in FB. If you go here, do not miss the most beautiful Mahaperiyava Temple in the world (to me!) built by Advocate Anna – it is a Patasala too – right opposite to temple. There is also an adishtanam of Kanchi Acharya – I dont remember the number – He was the guru of Sri Bodendra Swamigal (hope I am right).

திருவெண்காடு திருத்தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதனை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு திருத்தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னதியில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், குழந்தைப்பேறு, செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான பலன்கள் கைகூடும்.

திருவெண்காடு திருத்தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப் படுகின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு வகையான ஆகமம் கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு திருத்தலத்தில் மூன்று வகையான ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.
திருவெண்காட்டில் உள்ள மூன்று குளங்களிலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தைப்பேறு நிச்சயம் உண்டு.

திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

இத்திருத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்டபத்தில் திருத்தல வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
திருவெண்காடு திருத்தலத்தில் ஹோமம் செய்தால் பில்லி சூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

இத்திருத்தலத்துப் புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்துப் போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தியின் உடம்பில் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் போது அதனைப் பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

திருவெண்காடு திருத்தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளைப் பொறுமையாகப் பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியைப் பெறலாம்.

இத்திருத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

இத்திருத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் தவறாது தருபவள்.

காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

திருவெண்காடு திருத்தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.

சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது.
ஓம் நமசிவாய

Exit mobile version