Sage of Kanchi

அண்ணாமலைக்கு அரோஹரா


முக்தி தலமாக விளக்கும் திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி நாளும் கூடிய நாளில், தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் அருணாசல மலையின் மீது மஹாதீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து எல்லோரும் தங்கள் இல்லங்களில் எங்கும் தீபங்களை ஏற்றி பொரி உருண்டை, அப்பம், நைவேத்யம் செய்து வழிபடுவார்கள்.


प्रत्यङ्मुख्या दृष्ट्या प्रसाददीपाङ्कुरेण कामाक्ष्याः ।

पश्यामि निस्तुलमहो पचेलिमं कमपि परशिवोल्लासम् ॥

ப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்ட்யா ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: ।

பஷ்யாமி நிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரசிவோல்லாஸம் ॥

என்று ஒரு ஸ்லோகம் சொல்கிறார் மூக கவி. ‘ப்ரத்யங்முக்யா த்ருஷ்ட்யா’ உள்ளே திரும்பின திருஷ்டி, அந்தர்முகமாக, நாம் பார்க்கும் போது, கண்ணை மூடிண்டா என்ன தெரியறது? ஒண்ணும் தெரியமாட்டேங்கிறது. இருட்டாகத்தான் இருக்கு. ‘ப்ரஸாத³ தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’ காமாக்ஷியினுடைய பிரஸாதம், காமாக்ஷியினுடைய அனுக்ரஹம்ங்கிற விளக்கு, தீபத்தை வெச்சுண்டு பார்த்தோமானா, என்ன தெரியும்? ‘பஷ்யாமி’ – நான் பார்க்கறேங்கிறார் மூக கவி. அம்பாள் அனுக்ரஹத்துனால “பரஸிவோல்லாஸம்” பரமேஸ்வரனுடைய உல்லாசம், சிவானந்தலஹரியை நான் எனக்குள் ‘பஷ்யாமி’ பார்க்கிறேன். ‘நிஸ்துலம்’ – அதுக்கு துல்யமானது ஒண்ணுமே கிடையாது ‘அஹோ’ அந்த சந்தோஷத்தை சொல்றார் ‘பசேலிமம்’ ரொம்ப பழுத்த ஞானம் அது. அதை எனக்கு அம்பாள் அனுக்ரஹம் பண்ணிட்டான்னு சொல்றார். அப்படி அந்த அம்பாளுடைய அனுக்ரஹம் இருந்தா தான் சிவஞானம் கிடைக்கும். அம்பாள் வடிவமான மஹாபெரியவாளுடைய அனுக்ரஹம் என்ற விளக்கு நமக்குள் ஒளிவிட்டு, சிவஞானம் சித்திக்க வேண்டுவோம்.

Exit mobile version