Sage of Kanchi

Sri Periyava: A Heart Rendering Tribute by Guruji Gopalavallidasar

Jaya Jaya Sankara Hara Hara Sankara – This one really melts our hearts. What Guruji tells here is parama sathiyam isn’t it? Rama Rama

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் !

எம் இருள் நீக்க
இருள்நீக்கியில் பிறந்தீரே !

காஞ்சி மடத்திற்கு
கிடைத்த மாணிக்கமே !

மஹா பெரியவா
கண்டெடுத்த பொக்கிஷமே !

சனாதன தர்மத்திற்காக
பாடுபட்ட தவத்திருவே !

அவமானங்களையும்
அவமதித்தவரையும் வென்றவரே !

பழிகளையும், சூழ்ச்சிகளையும்
பகவானிடம் ஒப்படைத்தவரே !

ஆன்மீக
சமூக அக்கறையை
நிலைநாட்டினவரே !

தெய்வத் தமிழில்
தெளிவாய் பேசுபவரே !

சம்ஸ்க்ருதத்தில் சங்கோஜமில்லாமல்
சரளமாய் அனுக்ரஹிப்பவரே !

சுந்தரத் தெலுங்கில்
சுகமாய் பேசுபவரே !

இந்தியில் இன்பமாய்
இலகுவாய் அருள்பவரே !

எவராயினும் பார்த்தவுடன்
சிரிக்கும் திருமுகம் உடையவரே !

யார் பேசினாலும் கூர்ந்து
கேட்கும் திருச்செவி உடையவரே !

உடல் தளர்ந்தாலும்,
உள்ளம் தளராதவரே !

நீங்கள் கலியுக ப்ரஹ்லாதன் !
அதனாலேயே வஞ்சகர்கள்
நடுவிலும் வாழ்ந்து காட்டினீர் !

நீங்கள் கலியுக பரதன் !
அதனாலேயே எமக்காக
பாரங்களையும் சுமந்தீர் !

இந்(து)த சமுதாயம்
உமக்குத் தந்ததோ
இன்னல்களும்,
அவமானங்களும், துரோகங்களும்,
பழிச்சொற்களும்,
கேவலங்களும்…
இன்னும் எத்தனையோ
சொல்லமுடியாத
அசிங்கங்களும்…

ஆனால் நீங்கள்
எமக்குத் தந்ததோ…
கல்விச் சாலைகளும்,
மருத்துவமனைகளும்,
இன்னும் பலப்பல…

காஞ்சி மஹான்
மஹா பெரியவா
தந்த தனம் நீங்கள்…

எங்களுக்கு உங்கள்
மதிப்பும், மகிமையும்
தெரியவில்லை…
புரிந்துகொள்ள
முயற்சிக்கவுமில்லை…

எங்களை எல்லாம்
மன்னித்துவிடுங்கள்…

உங்களுக்காக நாங்கள்
எதுவுமே செய்யவில்லை…
உங்களுக்காக நாங்கள்
போராடவுமில்லை…

நாளைய இந்து சமுதாயம்
வெல்ல நீங்கள் விதைத்த
சமுதாயப் புரட்சி விதைகள்
பதில் சொல்லும்….

அதனால் தான்
காமாக்ஷி உங்களை
தன்னோடு அழைத்துச்
சென்றுவிட்டாள்…
அவளின் திருவடி
நிழலில் இனி
நிம்மதியாக இருங்கள்…

அங்கிருந்து
இந்த பாழ்பட்ட
பாரத சமுதாயத்தை
ஆசீர்வதியுங்கள்…

அம்மா…காமாக்ஷி…
உன் பிள்ளை
உன்னிடம்
வந்துவிட்டார்…

மஹாபெரியவா…
உம் சிஷ்யர்
உம்மிடம்
வந்துவிட்டார்…

இனியாவது
அந்த மஹான் (குழந்தை)
ஆனந்தமாய்
இருக்கட்டும்…

ஜெயேந்திரா…
என் மகனே…
போய் வா…
இந்தத் தகப்பனின்
கையாலாகாத்தனத்தை
மன்னித்துவிடப்பா…

உன் பெருமை…
நாளைய சமுதாயம்
பேசுமய்யா…
என் சங்கரனே…
என் செல்லமே…
என் ஜெயேந்திரனே…

புனிதமான ஹோலியன்று
பூமித்தாயின் மடியில்
நிம்மதியாய் படுத்துறங்கு
மகனே!!!!

முட்கள் தைத்த காலுக்கு
பாடுகிறேன் தாலாட்டு…
பழிகள் சுமந்த நெஞ்சுக்கு
பாடுகிறேன் தாலாட்டு…
அவமானங்கள் கேட்ட செவிகளுக்கு
பாடுகிறேன் தாலாட்டு…

எமக்காய் நடந்த
திருவடிகளுக்கு
பல்லாண்டு…

எமக்காய் சிந்தித்த
மனதிற்கு
பல்லாண்டு…

எம்மை ஆசீர்வதித்த
திருக்கைகளுக்கு
பல்லாண்டு…

எம்மைப் பார்த்தவுடன்
சிரிக்கும் திருமுகத்திற்கு
பல்லாண்டு…

உலகம் உள்ளவரை
உண்டய்யா உமது
கைங்கரியமும், தியாகமும்…

போய் வா மகனே…
போய் வா ஜெயேந்திரா…
வேண்டாம் மீண்டும்
இங்கே வரவேண்டாம்…
எம்மிடம் அகப்படவேண்டாம்…
எங்கிருந்தோ ஆசிர்வாதம்
செய்யுமய்யா…

எங்கே போகமுடியும்?!?
எம் மனதை விட்டு
எங்கே போகமுடியும் ?!?

ஜகத்குரு காஞ்சி காமகோடி
69வது பீடாதிபதி
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
திருவடிகளே சரணம் சரணம் சரணம்….

– -குருஜீ கோபாலவல்லிதாசர்

Exit mobile version