Thanks to Sri Varagooran mama for this beautiful incident.
Our namaskaram to Sri Variyar Swamigal!
Vetrivel muruganukku arohara!

அக்டோபர் 20,2017,.தினமலர்
முருக பக்தர் வாரியார் வாழ்வில் ஆறுமுகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம் இது.
1906ல் திருவண்ணாமலை மாவட்டம் காங்கேயநல்லூரில் பிறந்த வாரியாருக்கு வயது 22. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தங்கியிருந்தார்.
அவரது தந்தை மல்லையதாசர், தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் வீணை கற்க ஏற்பாடு செய்தார். மூன்று ஆண்டுக்குப் பின், மல்லையதாசர் மகனிடம், ”வீணை கற்றுக் கொண்டது போதும் அப்பா! உடனே ஊருக்கு வந்து விடு” என கடிதம் எழுதினார். தந்தையின் சொல்லை வேத வாக்காக ஏற்றார். ஆனால் தந்தையாரிடம், குரு காணிக்கையாக ஏதாவது தான் கொடுக்க விரும்புவதாக கடிதம் எழுதினார். அவர் அன்பளிப்பாக கிடைத்த இரண்டு எட்டு முழ வேட்டிகளை மகனுக்கு அனுப்பி வைத்தார். வாரியாருக்கோ சங்கடம் உண்டானது. ஏதாவது நல்ல நினைவுப்பொருள் தர வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது.
வாரியார் தங்கிய வீட்டின் எதிரில் முருகன் கோயில் இருந்தது. ”முருகா! ஞானபண்டிதா! குருநாதருக்கு என்னால் காணிக்கை கொடுக்க முடியவில்லையே” என கண்ணீர் விட்டார்.
அற்புதம் நிகழ்த்தினான் ஆறுமுகப் பெருமான். புரசைவாக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் திடீரென சொற்பொழிவாற்ற அழைப்பு வந்தது. சன்மானமாக நாற்பது ரூபாய் கொடுத்தனர்.
புதையல் வந்தது போல துள்ளிக் குதித்தபடி சைனா பஜாருக்கு ஓடினார் வாரியார்.அப்போது பவுன் விலை வெறும் பதின்மூன்று ரூபாய். இரண்டரை பவுனில் கைக்கு தங்கச் சங்கிலியும், அரைப்பவுன் பட்டாபிஷேக ராமர் டாலரும் வாங்கினார்.
தாய்மாமா கொடுத்த மூன்று ரூபாயில், மற்ற பொருட்களான பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வாங்கினார். குருநாதரின் வீட்டுக்குச் சென்று தட்டில் பழவகைகள், இரண்டு வேட்டிகள், தங்க நகைகளை வைத்து கொடுத்தார்.
”குருநாதா! ஏழை என்பதால் அதிகம் என்னால் கொடுக்க முடியவில்லை. அடியேன் அளிக்கும் சிறு காணிக்கையை ஏற்று ஆசி அளியுங்கள்” என்று சொல்லி குருவின் காலில் விழுந்தார்.
கண்ணீர் சிந்திய குருநாதர், ”நீ உத்தமமான பிள்ளை. உனக்கு தெய்வம் நிச்சயம் துணைபுரியும்’ என்று ஆசியளித்தார்.
வாரியாரும் குருதட்சணை வழங்கியதை எண்ணி மகிழ்ந்தார்