Sage of Kanchi

அவதார புருஷர்- காஞ்சி காமகோடி மஹா பெரியவா!

Thanks Smt Jayasree for WhatsApp share…

mp-holding-palms-together.jpg

(சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் மஹா பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா!

துன்பம் தீர்க்கும் கண் கண்ட கலியுகக் கோவிந்தனவர் கண் பார்த்தருளிடுவார்!
உலகுய்ய உருவெடுத்த உற்றவர் எல்லாருக்கும் வாழும் வழியும் சேர்த்தருளி தவ நன்மலர் பதமருளிடுவார்)

காஞ்சியில் ஒரு கோவிலில் மஹா பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து மஹாபெரியவாளை நமஸ்கரித்தனர்.

”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. மஹா பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..

“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால மஹா பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! மஹா பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு மஹா பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் மஹா பெரியவாளை த்யானிக்கற, மஹா பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்து!

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் மஹா பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் மஹா பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

மஹா பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.

உலகுய்ய உருவெடுத்த உற்றவர் தாழும் நிலை வரின் கனிந்தருளிடுவார்!
வாழும் வழி துயரம் தீர்க்கும் பாழும் வினைகள் களைந்தருளிடுவார்!
ஐயமில்லாருளும் பொற்கரரவர் ஏழேழ் பிறப்பிலும் துணை தந்தருளிடுவார்!
ஔதார்யப் பெருங்கடலாம் காமகோடிக் கருணாமயனவர் எல்லாரையும் காத்தருளிடுவார்!
துன்பம் தீர்க்கும் கண் கண்ட கலியுகக் கோவிந்தனவர் கண் பார்த்தருளிடுவார்!
உலகுய்ய உருவெடுத்த உற்றவர் எல்லாருக்கும் வாழும் வழியும் சேர்த்தருளி தவ நன்மலர் பதமருளிடுவார்!

ஈசனாம் பரமாச்சார்யரவர் கண் பார்த்து நல் வாழும் வழியருளிடுவார்!
ஜெய ஜெய குரு சங்கரா ஜெய ஜெய குரு மா தவா!

ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்தா சதா சிவ சங்கரா சரணம்!

Exit mobile version