Sage of Kanchi

காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ

 

periyava-chronological-227

Thanks to Sri Raghavan Iyengar for the share in FB.

மேற்கு மாம்பலம் சங்கர மடத்தின் பின்புறம். மாலை நேரம். மஹா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு சுருண்டு படுத்து, கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றிருந்த அத்தனை பேரும் துடிதுடித்துப் போயினர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

ஒருவர், ‘மஹா பெரியவாளுக்குக் கூடவா இப்படியெல்லாம் வரும்! எங்களாலே தாங்க முடியலையே’ என்று ‘ஓ’ வென்று கதறி விட்டார்.

மஹா ‘பெரியவாளும் மனுஷா தானே. கர்மாவாலே தான் இந்த உடம்பு வந்திருக்கு. அதக்குண்டானதை இந்தச் சரீரம் அனுபவிச்சுத் தானே ஆகணும்’ என்று கூறினார். சற்றைக்கெல்லாம் வலி நீங்கப் பெற்று சாதாரணமாகி விட்டார்.

அப்போது மடத்து யானை காமாட்சி, தீப நமஸ்காரம் முடிந்து மஹா பெரியவாளிடம் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட வந்தது. மஹா பெரியவா ஒரு குடிலில் அமர்ந்திருந்தார். பழத்தை கையில் வைத்துக் கொண்டு யானையை உள்ளே அழைத்தார். ஆனால், சிறுவாசலில் அத்தனை பெரிய சரீரம் எப்படி நுழைய முடியும். யானைப் பாகனும் யோசித்தபடி நின்றிருந்தார்.

மஹா பெரியவா விடாமல், ‘காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ’ என்று மீண்டும் அழைத்தார். அடுத்த கணம் நம்பமுடியாத அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெரிய யானை தன் உடலை மிகவும் அழகாகச் சுருக்கிக் கொண்டு அந்தக் குறுகிய வாசற்படியில் நுழைந்து, மஹா பெரியவாளிடம் பழத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னால் நகர்ந்த படியே வெளியே வந்தது.

மஹா ‘பெரியவாளும் மனுஷா தானே’ என்று மஹா பெரியவா கூறின அடுத்த கணம் இந்த அதிசயம்! இது அவர் திருவிளையாடல் என்று தான் நம்மால் கூற முடியும்.

Exit mobile version