
சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்,காஞ்சிபுரம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளயம் வேதாசல முதலியார் அவர்கள், ஒரு குழு அமைத்து,
பத்ரிநாத்,கேதார்நாத் யாத்திரையை மேற்கொண்டார்.
மலைப் பகுதிகளில் பிரயாண வசதிகள் வாகனப் போக்குவரத்து இல்லாத காலம். காலால் நடந்து செல்ல வேண்டும்; சௌகரியமிருந்தால், வாடகைக் குதிரை மீது ஏறிச் செல்லலாம்.
வேதாசல முதலியார் குதிரையில் சென்று கொண்டிருந்தார். பழக்கப்பட்ட குதிரை என்பதால்
குதிரைக்காரன் அதனுடன் வராமல் மற்றவர்களுக்கு உதவியாக அவர்களோடு நடந்து போய்விட்டான்.
செங்குத்தான ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது குதிரை மக்கர் பண்ணியது. மேலே நடக்காமல் முரண்டு செய்தது.இருள் கனத்துக்கொண்டு வந்த நேரம்.கால்நடையாகச் சென்றவர்கள் வெகுதூரம் போய்விட்டிருந்தார்கள்.
முதலியாருக்குப் பயம் தோன்றிவிட்டது. நிராதரவான அந்த சந்தர்ப்பத்தில்,மகா பெரியவாள் நினைவுதான் வந்தது.அவருக்கு குழப்பத்தினிடையே நெஞ்சுக்குள் உருக்கமான பிரார்த்தனை.
சிறிது நேரத்தில், சற்றுத் தொலைவில்,ஒரு வெளிச்சம் தெரிந்தது. அவரை நோக்கி வந்துகொண்டிருப்பது
போல் தோன்றியது. முதிய சந்யாசி ஒருவர்தான், கையில் அரிக்கன் விளக்குடன் அந்த பாதையில்
நடந்து வந்து கொண்டிருந்தார்.
அருகில் வந்ததும், முதலியாரின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட அவர், சரியான வழியில் நடத்திச்
சென்று, ‘இனி ஆபத்து இல்லை’ என்ற நிலையில் தன் வழியே செல்லத் தொடங்கினார். மிகவும்
நன்றியோடு முதலியார், துறவி சென்ற பாதையிலேயே கண்ணைச் செலுத்த அடுத்த நிமிடமே விளக்கு
வெளிச்சம் மறைந்தது.
“வந்தது பெரியவாள்தானோ? அல்லது பெரியவாள் டெலிபதியில் தகவல் கொடுத்து அனுப்பி வைத்த யோகியோ? தொண்டை மண்டலத்திலிருந்து இமய மண்டலத்துக்கு, இன்னொரு சரீரத்துடன் கடுகி வந்திருப்பாரோ?….
சிவ சிவ சிவ….”
புரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. முதலியார் பாக்கியசாலி!