Sage of Kanchi

மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே புண்ணியம்!

Thanks Sri Ambi for the article.

Kainkaryams to Sri Matam is the most blessed role in the world and at the same time very difficult task to do – staying awake at odd times and demands extensive physical effort. I was told that doing kainkaryam to Mahaperiyava was something one could not even imagine – it is like dealing with a fire! As we have read 100s of articles, Periyava had never forgotten and had honored almost all the sevakas and blessed them. The tradition continues till today.  Whatever we do there is the direct seva to Lord Chandramouleeswarar! If you remember, in one of the incidents that Sri Balu Swamigal mentioned that a north Indian old man once mentioned that all who do kainkaryams to Mahaperiyava are sivaganas as Periyava is none other than Parameswaran!

In our lifetime, at least for a day, we should try to do some kainkaryam at the matam in whatever way possible.

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

namavali036

 

1907ல் மகாசுவாமிகள், பீடாதிபதியாகப் பட்டம் ஏற்றார்கள். அப்போது ஸ்ரீமடம், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது. ஸ்ரீமடத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. முறையான வருமானம் இல்லாததாலும் ஸ்ரீமடத்தின் பூஜைப் பணிகளின் திட்டத்தை குறைத்துக் கொள்ள முடியாததாலும் அவ்வப்போது சில செல்வந்தர்களிடம் கடன் வாங்கும் நிலை இருந்து வந்தது.

சிப்பந்திகளுக்கு, சம்பளம் என்று பெருந்தொகை கொடுப்பது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஜகத்குருவிடம் இருந்த பக்தி காரணமாகவே, பலர் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். ‘இது ஒரு புண்ணிய கைங்கர்யம் என்ற மனப்பான்மை. அந்தக் காலத்தில் வருமானத்தில் கண் வைக்காமல், ‘புண்ணிய பேறு’ என்ற மனப்பக்குவத்துடன் கணேசய்யர் என்பவர் சமையல் துறையை கவனித்துக் கொண்டிருந்தார். சமைப்பது அடியார்களுக்கு சாப்பாடு போடுவதும் தான் அவருக்குத் தெரிந்த வேலைகள். அப்போது நிகழ்ந்த ஒரு மகாமகத்தின்போது தான் ஒன்றியாகவே ஆயிரம் பேர்களுக்குச் சமையல் செய்து போட்டிருக்கிறார் என்றால் அவருடைய தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் எவ்வாறு புகழ்வது?

வருடங்கள் கழிந்தன.

ஸ்ரீமடம், காஞ்சிபுரத்துக்கு வந்தாயிற்று. மக்கள் ஆதரவும் கணிசமாகக் கிடைத்தது. நிர்வாகத்தில், முற்போக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஓர் அன்பர், பெரியவாளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்றார்.

“என் பெயர் நடேசன், கும்பகோணம் மடத்தில் சமையல்காரராக இருந்த கணேசய்யரின் பிள்ளை.”

பெரியவாள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

‘நீ என்ன பண்றே?”

“சமையல் தான். வேறு எந்தத்தொழிலையும் கற்றுக் கொள்கிற அவகாசமே கிடைக்கல்லே… கஷ்ட ஜீவனம்.”

“பின் ஏன் சிலவு பண்ணிண்டு இங்கே வந்தே?”

“பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு. பெரியவா ஒத்தாசை பண்ணனும்.”

நாலைந்து நிமிடங்களுக்கு நிசப்தம்.

பெரியவா கண்களை மூடிக் கொண்டார்கள்…… சாம்பார் வாளியுடன் கணேசய்யர் தென்பட்டார்! ‘அப்பாடா… என்ன உழைப்பு! அவர் வேலை செய்யும்போது உடலில் வழியும் வேர்வை, ஓர் அண்டா நிறைய இருக்கும். அவர் பேத்திக்கு கல்யாணம்.’

அன்றைய தினம் பிக்ஷாவந்தனம் செய்வதற்காக ஒரு தனவந்தர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.

“ஜெகதீசா, உன் பிக்ஷனாந்தம் இன்னொரு நாள் செய்து கொள்ளலாம். இப்போ இந்தக் கல்யாணத்துக்கு ஏதாவது உதவி செய்யேன்.’

ஜகதீசன் ‘பரமபாக்கியம்’ என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவருடைய மனைவி உடன்வர நடேசனை அழைத்துக் கொண்டு ஓர் ஓரமாகப் போனார். மணி பர்ஸை திறந்து நடேசன் மேல் துண்டில் கொட்டினார். ‘ஒரு ரூபாய் மட்டும் வச்சுக்கிறேன். சரியா’?

அம்மையார், தன் பங்காக ஒரு ஜோடி வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். ஆவணி மாத ஆரம்பத்தில், கல்யாணம். புரட்டாசி கழிந்து ஐப்பசி வந்தது. நடேசனும் வந்தார், பெரியவா தரிசனத்துக்கு! வந்தனம் செய்துவிட்டுக் கை கட்டிக்கொண்டு ஓரமாக நின்றார்.

பெரியவாளிடம் எதுவும் பேசவில்லை. பெரியவாள் எதிரில், புதிய வேஷ்ட்டி, புடவை, யாரோ ஒரு பக்தர், காணிக்கையாக சமர்பித்திருந்தார். எதிரிலிருந்த மற்றப் புதிய துணிகளையும் அவனிடம் கொடு என்று அணுக்கத் தொண்டருக்கு ஜாடை. கண்களை சுழற்றி எதிரே நின்றவர்களை நோக்கி ஒரு எக்ஸ்ரே பார்வை, யாரோ ஒருவரிடம் பார்வை நிலைத்தது.

“நீ, மோதிரம் போட்டுண்டு இருக்கியா?”

“ஆமாம்”

“அதை இவனுக்கு கொடுத்துடேன்”

அடுத்த வினாடி, ஆணை நிறைவேற்றப்பட்டது.

இன்னொரு பாக்கியசாலி பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

“அந்த ரிஸ்ட் – வாச்சை இவனிடம் கொடுத்து விடு. நீ வேறே வாங்கிக்கோ..”

ரிஸ்ட் வாச் கை மாறியது!

உடனே நடேசனுக்கு பிரசாதமும் வழங்கி உத்திரவு கொடுத்தாயிற்று.

அவர் போன பின்னர் பெரியவா சொன்னார்கள் : “இவன் பெண்ணுக்கு தலைத் தீபாவளி. அதை சொல்லத் தான் வந்தான்… இவன் அப்பா – கணேச அய்யர் அந்தக் காலத்திலேயே மடத்துக்கு ஏராளமா கைங்கர்யம் செய்திருக்கிறார். மாச சம்பளம் (தலைமை சமையல்காரருக்கு) மூணு ரூபாயோ, நாலு ரூபாயோ! இப்படி, வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு உழைத்தவர்களை நினைச்சுண்டாலே புண்ணியம்.”

பக்தர்கள் நெகிழ்ந்தே போனார்கள் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?

– எஸ்.கோதண்ட ராம சர்மா தொகுத்த, ராயவரம் பாலு அவர்கள் எழுதிய ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பிலிருந்து

Exit mobile version