I do not know who shared this with me – looks like I stored this for a long time but forgot to post….Thanks to whoever sent this.
பெரியவா சூலூர்ப் பேட்டையில் தங்கியிருந்த சமயம் ஒரு சூரிய க்ரஹணம் வந்தது. தற்செயலாக நாங்கள் தரிசனத்துக்குச் சென்றிருந்தோம்.. க்ரஹணம் பிடிக்க வேண்டிய ஸ்னானத்துக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்கு பெரியவா சென்றார்களெல்லாரும் உடன் சென்றோம். ஸ்னானம் செய்வதற்குமுன் சொல்ல வேண்டிய சங்கல்ப மந்திரம் சொல்ல அங்கு பண்டிதர் யாரும் இல்லாததால் பெரியவாளே சங்கல்ப மந்த்ரத்தைச் சொன்னார். எங்கள் பாக்யம்!
பின் க்ரஹணம் முடிந்த பிறகு ஸ்ரீமடத்துக்கு அருகில் உள்ள திருக்குளத்துக்கு விமோசன ஸ்னானம் செய்ய பெரியவாளுடன் நாங்களும் சென்றோம் . வழி நெடுகிலும் நெருஞ்சி முட்கள்.பெரியவா பாதங்களை படாத பாடு படுத்தி விட்டன. குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு, ஒரு கால் மேல் மற்றொறு காலை மடித்து வைத்துக் கொண்டு தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தன் உள்ளங்காலை உன்னிப்பாகப் பார்த்தார்கள்.
எத்தனை முட்கள் அவரது சரணத்தில் தஞ்சம் புகுந்தனவோ! அடியார்களாகிய நாங்கள் சற்று தூரத்திலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். என்னை மட்டும் அருகில் அழைத்தார்! எத்தனை முட்கள் பார் என்று காட்டப் போகிறார்கள் என நினைத்து அருகில் சென்றேன்.
”என் உள்ளங்காலைப் பார் , நிறைய சக்கரங்கள் இருக்கு; இங்கே பார் ஒரே புள்ளியில் மூன்று ரேகைகள் சந்திக்கின்றன. அதனால் வண்டிச் சக்கரம் போல் ஆறு ரேகைகள் தோன்றுகிறதில்லையா?” இதற்கு ஷடரம் என்று பெயர். இந்த ரேகை இருப்பவர்கள் ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். (அதனால்தான் நானும் ஓடிக்கொண்டே இருக்கேன்!)
ராம நாதபுரம் ராஜா சொன்னார்..”உங்கள் பாதங்களில் அபூர்வ ரேகைகள் இருக்கின்றன; நடந்தால் அவை அழிந்துவிடும், அதனால் நான் என் ஆட்களுடன் மேனா ஏற்பாடு செய்கிறேன் ” என்றார்.
‘என்னிடமிருந்த பக்தியினால் அப்படிச் சொன்னார் ஆனால் நான் அது காரிய சாத்யமில்லை என்று சொல்லி விட்டேன்”
அதன்பிறகு ஸ்னானம் செய்து முகாமுக்குத் திரும்பினோம். ஊர் திரும்பியதும் நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். அம்மாவுக்குப் பரம பரவசம்!
”யாருக்கும் கிட்டாத பாத தரிசன அனுக்ரஹம் உனக்குக் கிடைத்திருக்கு! க்ரஹண புண்ய காலத்தில் பாத தரிசனம் கொடுத்து உன்னை ஆசீர்வாதம் பண்ணியிருக்கா”
இதனை டைப் அடிக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது முதலாவதாக பத்ம பாதம் எப்படி நொந்திருக்கும் என்ற பாமரத்தனமான நினைவு; அடுத்து எப்பேர்ப்பட்ட பாக்யசாலி இந்த அனுபவத்தை அடைந்த எஸ் சீதாராமன் என்ற பக்தர்!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா எனப் பாடத் தோன்றுகிறதல்லவா? மிக்க அனுக்ரஹசாலி!!
தகவல் கோதண்டராம சர்மா தரிசன அனுபவங்கள்
ஜய ஜய சங்கரா…
