மகான் ஸ்ரீ சிவன் சாரின் 18-ஆவது ஆராதனை விழா
By dn, சென்னை
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீ சிவன் சாரின் ஆராதனை விழாவில் வெளியிடப்பட்ட போதேந்திர சுவாமிகள் நூலுடன் (இடமிருந்து) சிவா சாகரத்தைச் சேர்ந்த சிவராமன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மகாலட்சுமி மகளிர் நாடகக் குழுவின் நிறுவனரும், நடிகையுமான பாம்பே ஞானம், மகா பெரியவா இணையதளத்தின் நிறுவனர் மகேஷ் கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் சுவாமிநாதன்.
மகான் ஸ்ரீ சிவன் சாரின் 18-ஆவது ஆராதனை விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) நடைபெற்றது.
1904-ஆம் ஆண்டு திருவையாறு அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தில் பிறந்த சிவன் சார், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர். இவர் காஞ்சி பரமாச்சாரியார் மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் இளைய சகோதரர். அப்படியிருந்தும்கூட அவர் காஞ்சி சங்கர மடத்துடன் நேரிடையான எந்த தொடர்பும் இல்லாமல் முற்றும் துறந்த துறவியாகவே சஞ்சரித்து வந்தார். வாழ்வியல் தத்துவங்களை ஆன்மிக நெறிகளுடன் விளக்கி அவர் எழுதிய “ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ எனும் புத்தகம் ஆன்மீக தத்துவ நூல்களில் இன்றியமையாத ஒன்றாகும்.
1996-ஆம் ஆண்டில் தனது 91-ஆவது வயதில் காலமான சிவன் சாரின் நினைவாக ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 18-ஆவது ஆராதனை விழாவில் போதேந்திர சுவாமிகளின் வரலாறு மற்றும் கோவிந்தாபுரத்தில் அவருக்கு மடம் நிறுவப்பட்டது குறித்து ஸ்ரீ சிவன் சார் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் தனியாகத் தொகுக்கப்பட்டு “போதேந்திர சுவாமிகள்’ எனும் தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது.
அந்த நூலினை “தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதன் வெளியிட, மகாலட்சுமி மகளிர் நாடகக் குழுவின் நிறுவனரும், நடிகையுமான பாம்பே ஞானம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் சிவா சாகரத்தைச் சேர்ந்த சிவராமன், மகா பெரியவா இணையதளத்தின் நிறுவனர் மகேஷ் கிருஷ்ணமூர்த்தி, பத்திரிகையாளர் சுவாமிநாதன் உள்பட சிவன் சாரின் நூற்றுக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர்.
ஆராதனை விழாவின் ஒரு பகுதியாக மகாலட்சுமி மகளிர் நாடகக் குழுவினரின் ஸ்ரீ பகவான் நாம போதேந்திராள் எனும் நாடகம் நடைபெற்றது.
முன்னதாக நூலினை வெளியிட்டு “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியது:
“”நான் “தினமணி’ தொடர்பில்லாத புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இது எனக்குப் பிறவிப் பயன் என்பதால், இங்கே இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன்.
இத்தனை பேர்கள் சிவன் சாரின் ஆராதனைக்காகக் கூடியிருக்கிறீர்கள். 40 ஆண்டுகளுக்கு முன்னால், மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் இரண்டாவது மாடியில் இருந்த எனது சித்தப்பா உமா மகேஸ்வரனின் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில், எட்டுக்கு ஐந்து குறுகிய இடத்தில் தங்கியிருந்த சிவன் சாரை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த மகானோடு 2 ஆண்டுகள் பல மணி நேரம் தனிமையில் கழித்த தருணங்களை சிந்தித்துப் பார்க்கிறேன். மெய் சிலிர்க்கிறது.
சிவன் சார் எழுதிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் இவ்வளவு எழுதுகிறீர்களே என்று கேட்டேன். சிரித்தபடி சொன்னார்- “”வருங்காலத்தில் நீ எழுதிக் குவிக்கப் போகிறாய்” என்று. 40 ஆண்டுகளுக்கு முன்னால், 22 வயது இளைஞனான என் வருங்காலத்தை நிர்ணயித்த மகான் சிவன் சார்!
சிவன் சாருக்கு என் சித்தி உணவு கொண்டு போய் கொடுக்கச் சொல்வார். சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போய் கொடுப்பேன். பல நாள்கள் எதுவும் சாப்பிட மாட்டார். “”இப்படி பட்டினி கிடந்தால் எப்படி?” என்று ஒருமுறை உரிமையுடன் கேட்டேன். ஆள்காட்டி விரலை மேல்நோக்கிக் சுழற்றிக் காட்டினார்.
“”காற்றைச் சாப்பிட முடியுமா?” என்ற கேள்விக்கு சிவன் சார் தந்த பதில்- “”சாப்பாடு இல்லாமல் காற்றிருந்தால் வாழலாம். காற்றில்லாமல் சாப்பாடு இருந்தாலும் வாழ முடியாது!”
சிவன் சாரை சந்திக்க எப்போதாவது யாராவது வந்து போவார்கள், அவ்வளவே. அந்த மகானுடன் பல மணி நேரம் தனிமையில் உபதேசம் கேட்டதை இன்று நினைக்கும்போது புரிகிறது- “ஜென்ம சாபல்யம்’ என்கிற வார்த்தையின் பொருள்.
நான் இந்தப் புத்தகத்தை வெளியிடவில்லை. வெளியிட பணிக்கப்பட்டிருக்கிறேன்; அவ்வளவே!” என்றார் “தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
*****
Proud of you Mahesh!
Source: Dinamani
Thanks a ton to Shri Varagooran Narayanan for posting this in Sage of Kanchi group in Facebook.
