Sage of Kanchi

“பெரியவா! உங்களோட கைரேகை, கால்ரேகை எல்லாத்தையும் தரிசிக்கணும் …”

பெரியவாள் காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் தங்கியிருந்தார்கள்.

ஓர் இரவு ஏழரை மணி. வெளிச்சம் அதிகமில்லாத சிறு அறையில், குத்துவிளக்கின் ஒளியில், ஏதோ ஓர் ஆன்மீகம் நூல் படித்து கொண்டிருந்தார்கள். எனக்கு முன்னதாக அந்த அறையில், பெரியவாளை தவிர, அவர்களுடைய அணுக்கத் தொண்டர் ஒருவரும், எண்பது வயதான மூதாட்டியும் இருந்தார்கள். நான், பெரியவாளை வணங்கி எழுந்தேன். இராமாயண சபரியின் கலிகால அவதாரமாக இருந்த மூதாட்டி, அப்போது ஓர் அதிசயமான விண்ணப்பத்தை, பக்தி பரவசமான கோரிக்கையை, உள்ளத்தின் அடித்தளத்தில் நெடுங்காலமாக கனிந்து கொண்டிருந்த விருப்பத்தை பெரியவாளிடம் சமர்பித்தார்.

பிரமோஷன் கிடைக்கணும்; பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும்; வியாதி போகணும்; பிஸினஸ் வளரனும்; கேஸ் ஜெயிக்கணும்…. இம்மாதிரி கோரிக்கைகளை கேட்டு கேட்டு பழக்கப்படிருந்த செவிகளில், புத்தம் புதியதாக ஒரு வேண்டுகோள் இனிய ஓலி அதிர்வாய் விழுந்தது.

“பெரியவா! உங்களோட கைரேகை, கால்ரேகை எல்லாத்தையும் தரிசிக்கணும் …”நடுங்கிவிட்டோம் – நானும் அணுக்க தொண்டரும்.

கயிலைநாதன், “என் அம்மையே வருக’ என்று அழைத்த காரைக்கால் அம்மையாரின் பக்தி பரம்பரையில் தோன்றியவர், அந்த மூதாட்டி என்பது எங்களுக்கு விளங்காமற் போயிற்று.

ஆனால், காஞ்சினாதனக்கு தெரியுமே!

‘டார்ச் லைட் கொண்டுவா’ – என்று தொண்டருக்கு சமிக்ஞை.

அந்த விளக்கொளியில், ஒளிமயமான, கருணை வடிவான பெரியவாள், தம்முடைய கைரேகைகளையும், கால் ரேகைகளையும் அந்த மூதாட்டிக்கு காட்டியருளினார்கள்.

புனித பாரதத்தை, நடையினால் மேலும். புனித படுத்திய அரவிந்த பாதங்கள்…

அபய முத்திரையாய், தூக்கி காட்டி, துன்பத்தில் தவிக்கும் லட்சோப லட்சம் பக்தர்களை உயரத் தூக்கிய கரங்கள்…

ஆகா! என்ன தவம் செய்தேன்!

என் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

மூதாட்டியின் ஆழங்காண முடியாத பக்தியை கண்டு வலது கண்ணில் பரவசக் கண்ணீர்; பெரியவாளின் எல்லையில்லா கருணையை கண்டு இடது கண்ணில் ஆனந்த கண்ணீர்….

******
Thanks a ton to Shri “Well Bred” Kannan who had posted this in Sage of Kanchi group in Facebook.

Exit mobile version