Site icon Sage of Kanchi

Subbu Arumugam — Part 2 “தம் தலையில் இருந்த வில்வமாலையை எனக்கு போட்டுவிட்டார் மகா பெரியவர்.”

மகாபெரியவரின் ஆசி மற்றும் அனுக்கிரகத்துடன் மீனாட்சி கல்யாணம், சீனிவாச கல்யாணம், வள்ளித்திருமணம், பார்வதி கல்யாணம், ராமாயணம், மகாபாரதம் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தினேன். ஒரு முறை மகாபெரியவரைப் பார்க்க போயிருந்தேன். ‘என்ன பண்ணிண்டிருக்கே’ என்றார் அவர். ‘கிருஷ்ணாவதாரம் நிகழ்ச்சி நடக்கப்போகிறது’ என்றேன். திடீரென்று ‘என் கதையெல்லாம் சொல்ல மாட்டியா?’ என்றார். அவர் கேட்டது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘பெரியவா உத்தரவு’ என்றேன். ‘எப்படி பண்ணுவே?’ என்றார். ‘காலடி முதல் காஞ்சிவரை’ என்றேன். ‘பலே. இப்பவே ஆரம்பிச்சுட்டான்’ என்று சிரித்தவாறே ஆசீர்வாதம் பண்ணினார். ‘சுப்பு.. கேரளா பத்தி சொல்லும்போது, பரசுராம க்ஷேத்திரம்’ என்று சொல்லணும். தெரியுமா?’ என்றார். கிட்டத்தட்ட இரண்டரை வருட கால ஆராய்ச்சிக்குப் பின் உருவானதுதான் ‘காலடி முதல் காஞ்சி வரை.’

மகாபெரியவரின் மடத்து சிஷ்யரான பிரதோஷம் வெங்கட்ராமன், ‘நிகழ்ச்சியை முதன்முதலில் என் வீட்டில்தான் நடத்தணும்’ என்றார். ‘சரி’ என்று சொல்லிவிட்டு, பெரியவரிடம் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி ஆசீர்வாதம் வாங்கச் சென்றேன். நான் பாட, பாட பெரியவர் ‘தொடர்ந்து பாடு’ என்று உத்தரவு போட்டுவிட்டார். கடைசியில் முழு நிகழ்ச்சியும் அவர் முன்னாலேயே அரங்கேறிவிட்டது. இடையில் தொலைபேசியில் வெங்கட்ராமன் வினவ, ‘மகாபெரியவர் முன்னிலையில் நடக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டாராம். நிகழ்ச்சி முடிந்தவுடன் தம் தலையில் இருந்த வில்வமாலையை எனக்கு போட்டுவிட்டார் மகா பெரியவர். என்னைக் கண்டாலே சிரிப்பார் பெரியவர். காந்தி மகான் கதை மூலமாக காஞ்சி மகான் அறிமுகம் கிடைத்து அவரது அன்பிலும், அனுக்கிரகத்திலும் கரைந்தவன் நான். எனக்கு அவர்கள் இருவருமே இரு கண்கள். அவர் முன்பு, ஆசுகவியாகப் பாடிய பாடல் இது :

அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தை ஒன்று
அன்பருக்கு அருள் காட்டும் குருவின் முகம் ஒன்று
செம்மை மிகு இந்து மதத்தலைவர் முகம் ஒன்று
சித்தாந்த ஒளிகாட்டும் ஞான முகம் ஒன்று
தம்மையே தாமிழந்த தியாக முகம் ஒன்று
தாய்போல கருணை காட்டும் அன்பு முகம், ஒன்று
நம்மிடையில் காட்சி தரும் ஆறுமுகம் என்று
நமஸ்காரம் புரிகிறோம் பெரியவரை இன்று
*****
Thanks a ton to Shri Bhaskaran Shivaraman who had posted this in Sage of Kanchi group in Facebook.

Exit mobile version