
ஶ்ரீசித்பராசக்தி கொலுவிருக்கும் சாக்த மஹாபீடங்கள் 1 :
ஹிங்க்லாஜ் பகவதி ஶ்ரீஹிங்க்லாஜ் மாதா :
“ப்ரஹ்மரந்த்ரம் ஹிங்குலாயா பைரவோ பீமலோசன:
கோட்டரீ ஶ்ரீமஹாமாயா த்ரிகுணா யா திகம்பரி”
“ஸதி தேவியான தாக்ஷாயணியின் ப்ரஹ்மரந்த்ரம் எனும் ஸஹஸ்ராரம் விழுந்த ஸ்தானமே ஹ்ங்க்லாஜ். அங்கே வீற்றிருக்கும் பகவதி ஸாக்ஷாத் ஹிங்க்லாஜ் அம்பாள் ஆதிஶக்தி. பீமலோசனர் பைரவர். அவளுக்கு கோட்டரீ என்பது நாமம். அவள் மஹாமாயா. த்ரிகுணா. அவளே திகம்பரி”
ஆதிமஹாஶக்தியான ஶ்ரீமாதா கொலுவிருக்கும் க்ஷேத்ரங்கள் அனேகம்!! அகண்ட மஹாபாரத வர்ஷத்தில் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், பூடான், மியான்மார், ஶ்ரீலங்கா உள்பட) அம்பாள் கொலுவிருக்கும் ஸித்த மஹாபீடங்களும், ஶக்தி மஹாபீடங்களும் அனேகம்!! பகவதியின் உபாஸனை ஆஸேது ஹிமாசலம் அனேகவிடங்களில் அனேவிதமாக விளங்குகின்றது.
உலகின் பழமையான மார்க்கம் ஶாக்தம். ஶக்தி உபாஸனையின் ஆரம்பம் என்பது மிகப்பழமையானது. தாய் தெய்வ வழிபாடே உலகின் மிகத்தொன்மையானது என்பது அனேக ஆராய்ச்சிகளிலும் தெரியவருகிறது.
அம்பிகைக்கு அனேக ஶாக்த பீடங்கள் விளங்கும் போதும் ப்ரதான்யமாக ஐம்பத்தோரு மஹா பீடங்கள் விளங்குகின்றன. அதைத் தவிரவும் அனேக ஶாக்த மஹாபீடங்கள் அம்பாளுக்கு அதிவிஶேஷமாக உண்டு!! தேவிக்கு ப்ரதான்யமாக விளங்கும் அத்தகைய பீடங்களின் மஹத்வத்தையே தொடர்ந்து இப்பதிவில் சிந்திக்கப்போகிறோம்!!
ஸதி தேவியின் ப்ரஹ்மரந்த்ர ஸ்தானம் விழுந்த க்ஷேத்ரமான ஶ்ரீஹிங்குலாம்பாளின் பீடத்திலிருந்து தொடங்குவோம்.
ஶாக்தாச்சாரத்தில் உபாஸிக்கப்படும் க்ஷேத்ரங்கள் பாரத வர்ஷத்தில் அனேகமுண்டு!! முக்யமாக த்ரிபுரா, அஸாம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவில் ஶாக்தாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தேவியின் அதிமுக்யமான ஸ்தானங்களில் ஒன்று ஹிங்க்லாஜ் எனும் மஹாஶக்தி பீடமே. இந்த பீடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. பலுசிஸ்தானில் ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளின் ப்ரஹ்மரந்த்ரம் விழுந்த ஸ்தானமாக விளங்குகின்றது.
“ஹிங்க்லாஜ் யாத்ரா” எனும் மிக்ப்பெரிய யாத்திரை நடக்கும் மஹாபீடம். அனேக பக்தர்களைக் கொண்ட மஹாஶக்தி இவள். பரஶுராமராலும் ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தியாலும் உபாஸிக்கப்பட்டவளும். ஸாக்ஷாத் ஶ்ரீதேவியின் ப்ரஹ்மரந்த்ரம் விழுந்த க்ஷேத்ரமாதலால் மிக ஸாந்நித்யத்துடன் விளங்கும் ஆதிமூர்த்தி இவள்.
தேவீ பாகவதத்திலும் ஶ்ரீபுவனேச்வரி தன் தந்தையான இமயபர்வத ராஜனுக்கு உபதேசம் செய்யுமிடத்து, ஶ்ரீதேவியின் ஸ்தானமான “ஹிங்குலா” எனும் பீடம் தனக்கு மிகப்ரியமானது என்று கூறுகிறாள்.
“ஹிங்கோல்” எனும் ராக்ஷஸன் உலகிற்கு அனேக உபத்ரவங்களைச் செய்ய, ஸகல தேவர்களும் ஶ்ரீபரமேச்வரியை ப்ரார்த்திக்கின்றனர். ஶ்ரீபராம்பாளும் அவர்கள் ப்ரார்த்தனைக்கிறங்கி ஹிங்கோலுடன் யுத்தஞ் செய்கிறாள். அவன் தேவிக்கு பயந்து இங்கே விளங்கும் குஹையில் ஒளிந்து கொள்ள, பகவதி ஶ்ரீமஹாசண்டியாகத் தோன்றி அந்த அஸுரனை ஸம்ஹரித்த மஹத்தான க்ஷேத்ரமே “ஹிங்க்லாஜ்” எனும் மஹாபீடம். ஹிங்கோலின் ப்ரார்த்தனைக்கிரங்க ஶ்ரீஆதிமஹாஶக்தி இன்றும் “ஹிங்க்லாஜ்” அல்லது “ஹிங்குலாம்பா” அல்லது “இங்குலா” எனும் நாமத்துடனேயே அழைக்கப்படுகிறாள்.
அம்பாளுக்கு ஸ்வரூபமில்லை. ஸ்வயம்பு மூர்த்தமாக பிண்டி வடிவிலேயே வழிபடப்படுகிறாள். ராவண ஸம்ஹாரத்திற்குப் பிறகு ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தி ஸீதாலக்ஷ்மணர்களுடன் வந்து உபாஸித்த சரித்ரம் இங்கு விஶேஷமாகக் கூறப்படுகிறது. மேலும் ஶ்ரீபரசுராமர் பராஶக்தியை இந்த க்ஷேத்ரத்தில் உபாஸித்த மஹத்வமும் கூறப்படுகிறது. அடுத்த பதிவில் அந்த சரித்ரத்தை சிந்தனை செய்வோம்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
- — மயிலாடுதுறை ராகவன்