Sage of Kanchi

ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யானம் 3:

“மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மீரிதி ச்ருதா
ஆதிசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவ ஸத்ருசப்ரபா”

“மூலசக்தி — சக்தி எனும் பதமே ஸர்வ வ்யாபகத்வத்தோடே கூடி விளங்கும் ப்ரஹ்மஸ்வரூபத்தையே குறிக்கிறது. மூலசக்தி எனும் பதம் பூர்ண ப்ரஹ்மஸ்வரூபத்தோடே ப்ரகாச விமர்ச ஸாமரஸ்ய நிர்குண நிலையிலே விளங்கும் பரத்தையே குறிக்கிறது. அத்தகைய பரசைதன்ய வஸ்துவானதால் இவள் மூலசக்தி. அன்றியும், ஸர்வத்திற்கும் மூலமாக விளங்குபவளாதலாலும் இவள் மூலசக்தி. அல்லது மஹாலக்ஷ்மி சண்டிகா எனும் மூலஸ்வரூபத்தில் விளங்குபவள். இந்த நிர்குணபர ஸ்வரூபத்தையே ஶ்ரீமூகாச்சார்யர் “காரணபரசித்ரூபா” என்று தன்னுடைய மூகபஞ்சசதியிலே கூறுவார்!!”

ப்ரஹ்மவித்யா — எந்த வித்யையானது கரதலாமலகம் போல் ப்ரஹ்மஸ்வரூபத்தை பளிச்செனக் காட்டுமோ, அதுவே ப்ரஹ்மவித்யா. வேதவேதாந்த ப்ரதிபாத்மகமான ப்ரஹ்மவித்யையும் ஶ்ரீவித்யையும் ஒன்றே என்பது யோகீச்வராளோடே அபிப்ராயம். ஸதாசிவனால் ப்ரஹ்மவித்யா ஸ்வரூபிணியான ஶ்ரீகாமாக்ஷியின் ஸ்வரூபம் உபதேசிக்கப்பட்ட ஸநகாதி யோகீச்வரர்கள் பவானியை உபாஸித்து ப்ரஹ்ம வித்யையை உணர்ந்தார்கள். தத்வமஸ்யாதி வாக்யத்தை அனுபவத்தில் கொண்டுவர பாலா முதற்கொண்ட வித்யைகளை உபாஸித்தல் அவச்யம் என்பதும், ஸந்யாஸிகளும் ஶ்ரீவித்யோபாஸனையாலேயே கைவல்யமடைவர் எனும் த்ரிபுரா ரஹஸ்ய வசனம் ஒப்பிடத்தக்கதாகும். ஆதலால் ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியான ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை உபாஸித்து, அப்பராம்பாளோடே தாதாத்ம்யத்தை அடைவதே ப்ரஹ்மவித்யோபாஸனையின் லக்ஷ்யம்.
ஒப்பிடுக : “மத்யே பைந்தவ ஸிம்ஹபீட லலிதே த்வம் ப்ரஹ்மவித்யா சிவே” — தூர்வாஸர்

ஆதிசக்தி : ஸர்வத்திற்கும் ஆதாரமான ப்ரஹ்மமாதலால் இவள் ஆதிசக்தி. ஸர்வவ்யாபகத்வத்தோடே கூடி விளங்கும் ஆதார ப்ரஹ்மமே ஆதிசக்தி. நிர்குணையான இவளே ஸகுணையாகவும் விளங்குவாள். மூலப்ரஹ்மமானது லோக ச்ருஷ்டி செய்யும் இச்சையினால் சிவந்து “காமேச்வரி” எனும் ரூபம் தாங்கியது. பின் “காமேச்வர” சிவத்தை தனக்குள்ளிருந்து வெளியிட்டது. பின் ஶ்ரீசக்ரத்தை ச்ருஷ்டித்து, சிவசக்தி ஸம்மேளனத்தினாலே ஜகத் ச்ருஷ்டியைச் செய்தது முதற்கொண்ட விபரங்களை த்ரிபுராரஹஸ்யம், லலிதோபாக்யானம், தந்த்ர வசனங்கள் மூலமாக அறியலாம். ஸர்வாதார மூர்த்தியான நிர்குண வடிவோடே கூட ஜகத் ச்ருஷ்டிக்கு ஆதார ஸகுணாமாகவும் விளங்குவதாலே ஆதிசக்தி. ஸத்வம் ரஜஸ் தமஸ் எனும் முக்குணங்களும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஸமமாக விளங்கும் ஸ்வரூபம் என்று அர்த்தம் செய்துகொள்ள வேணும். இந்த ஆதிசக்தியே, ஸத்வகுணத்தால் மஹாஸரஸ்வதி, ரஜோகுணத்தால் மஹாலக்ஷ்மி, தமோகுணத்தால் மஹாகாலி எனவும் அன்றி ஸத்வத்தால் கௌரீ, ரஜஸால் துர்கை, தமஸால் காலி எனும் வடிவங்களையும் தாங்கிக்கொள்கிறாள் என்பதும் புராண தந்த்ர வசனங்கள்.

தொடர்ந்து சிந்திப்போம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version