குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி

(Thanks to Sri Ganapathysubramanian for the FB share)

காஞ்சீ க்ஷேத்ரத்தில் இருக்கும் பல திருக்கோயில்களில் சிற்பங்களாகக் காணப்படும் ஸ்ரீகாமாக்ஷி அம்பாளுடைய சிலா ரூபங்களையும் தவக்கோலத்தில் இருக்கும் ஸ்ரீசங்கராசார்யாளுடைய உருவத்தையும் கவனிக்கும் போதும் ஒரு பெரிய உண்மை வெளியாகிறது.

ஸ்ரீஏகாம்ரேச்வரர் ஆலயத்தில் ஸ்ரீகாமாக்ஷி அம்மையின் தவக்கோலம் சிலா ரூபத்திலே இருக்கிறது. இங்குள்ள அம்பாள் பஞ்சாக்னி மத்தியில், இடது காலையூன்றி, வலக் காலை மடித்து, இடது கரம் பக்கத்தில் இருக்க, வலக்கரத்தைத் தலைக்குமேல் உயர்த்தியிருக்கிற நிலையையே சிற்பம் காண்பிக்கிறது.

காஞ்சி ஸ்ரீகாமாக்ஷியின் ஆலயத்திலே உள்ள ஒரு தூணில், இரு பக்கங்களில் அம்பிகையின் தவக்கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டிலும் ஸ்ரீஆசார்யாளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதே சிவ சின்னங்கள் இருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது.

ஏகாம்பரேச்வரர் ஆலயத்தில், நின்ற கோலத்தில் ஸந்யாஸ சின்னங்களுடன் ஸ்ரீஆதிசங்கரர் தவம் செய்வதைக் காணலாம். சிரசாஸனத்தில் நிஷ்டையில் இருப்பது போலும் ஒரு சிலா ரூபமும் அங்கேயே இருக்கிறது.
தண்டம் என்பது சந்நியாசிகளுக்கே ஏற்பட்ட ஒரு சின்னம். ஸ்திரீகளுக்கு அது கிடையாது. அப்படி இருக்க, தேவி ஸ்ரீகாமாக்ஷி தண்டம் வைத்துக் கொண்டு தவக்கோலத்தில் இருப்பதன் தாத்பர்யம் என்ன?

ஸ்ரீகாமாக்ஷியேதான் ஸ்ரீஆசார்ய ரூபியாக இருக்கிறாள் என்பதையே இது குறிப்பிடுகிறது. காளிதாஸனும் ஸ்ரீபராசக்தியை, ‘தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்” என்று ஸ்தோத்திரம் செய்திருப்பதும், ‘மூகபஞ்சசதி’யில் கவி ‘குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி” என்றதும் இதனால்தான்.

தேவிக்கும் குருமூர்த்திக்கும் இரண்டும் பேதம் இல்லை என்பதை விளக்க இவையே போதுமானவை.
பாரத நாட்டில் ஸ்ரீசங்கரர் தொடர்புடைய ஸ்தலங்களில் காஞ்சியில் மட்டுமே அதிகமான எண்ணிக்கையில் அவரது சிலாரூபங்கள் காணப்படுவதால், இந்நகரத்தில் அவர்கள் ஸ்ரீசக்ரப்ரதிஷ்டை, ஸர்வஜ்ஞபீடாரோஹணம் செய்து, தமக்கென ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தை நிறுவி, வெகுகாலம் வாஸம் செய்து ஏழு மோக்ஷபுரிகளுள் ஒன்றாகத் தென்னாட்டில் விளங்கும் ஒரே முக்தி க்ஷேத்ரமாகிய காஞ்சீபுரத்திலேயே ஸித்தியுற்றனர் என்ற வரலாறும் நமக்குத் தெளிவாகும்.



Categories: Bookshelf

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d