டெல்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?

This may be a repeat. Thanks to my friend Srini for sharing this…

Hara Hara Sankara Jaya Jaya Sankara…

அஞ்சலை என்ற இளம் வயதுப் பெண். அவள் ஒரு துப்புறவுத் தொழிலாளி. கணவன் இல்லை; இரண்டு சின்னச்சிறு பாலகர்கள்; கடுமையான வறுமை…

இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.

பெரியவாளைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது! தெரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவள் இல்லை…!

1984-ல் பெரியவா… அவள் இருந்த க்ராமத்துக்கு விஜயம் செய்தார். க்ராமத்தில் இருந்த பெரிய மனிதர்கள் முதல் எல்லோரும் பெரியவாளை தினமும் சென்று தர்ஶனம் செய்வதை கண்டாள்.

“நம்ம ஊருக்கு ஒரு ஸாமியார் வந்திருக்காங்களே…! நானும், அவரைப் போயி பாத்துட்டு வரப்போறேன்”

அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிவிட்டு, தன் குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள்.

பக்தி என்ற நிலையெல்லாம் அவளுக்கு என்னவென்றே தெரியாது.

நமஸ்காரம் பண்ணிவிட்டு குழந்தைகளுடன் நகர்ந்தவளை… தடுத்தாட்கொண்டது…. அவ்யாஜகாருண்யம்!

“அவ பேர்… என்னன்னு கேளு..”

பாரிஷதரிடம் சொன்னார்….

“ஒம்பேர் என்னம்மா? ஸாமிகிட்ட சொல்லு”

“அஞ்சலைங்க… ஸாமி ! ”

“என்ன வேலை பாக்கற?..”

“துப்புறவு வேலை செய்யறேங்க ஸாமி !..”

“இவா… ரெண்டு பேரும்….?.”

“இவங்க எம் பையனுங்க… ஸாமி! பெரியவன் நாலாப்பு படிக்கறான், இவன் சின்னவன் ஸாமி ”

கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு “அவ்வளவுதான்! ” என்பதுபோல் குழந்தைகளோடு வாஸலுக்கு வந்து விட்டாள்.

பாவம் ! அவளுக்கு பக்தி பண்ணுவதில், எந்தவித முறையும் தெரியாது.

தெய்வம்… ஒருவருக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று எண்ணிவிட்டால்……?????

“அவளக் கூப்டு!…”

“இந்தாம்மா! ஒன்ன… ஸாமி கூப்படறார்…”

பாரிஷதர் ஓடி வந்து அழைத்ததும், உள்ளே ஒரு வித பயத்தோடு மெல்லத் திரும்பி வந்தாள்.

“ஒம்பேரு அஞ்சலைன்னு சொன்னியே….! நீ எதுக்குமே பயப்பட மாட்டியோ?…”

அன்பும், குறும்பான புன்னகையும் பெரியவா முகத்தில் தவழ்ந்தது. (அஞ்சுதல் என்றால் பயம்)

எல்லாவற்றுக்கும் மேலே, பெரியவாளுடைய தீக்ஷண்யமான நயன தீக்ஷை அந்த ஏழைத் துப்புறவுத் தொழிலாளியின் ஹ்ருதயத்துக்குள் ஆழ்ந்து இறங்கி, தக்ஷணமே “உண்மையான மஹாபக்தை” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டாள்!

விளையாட்டாக அவளோடு பேசுவது போல் சீண்டினார்….

“ஒன்னோட ரெண்டாவுது பிள்ளை, டில்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?..”

அஞ்சலைக்கு அவளையும் அறியாமல், லேஸாக சிரிப்பு வந்துவிட்டது.!

பக்கத்தில், ஒழுகும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அஞ்சலையின் புடவைத் தலைப்பை விடாமல் பிடித்துக் கொண்டு, கிழிந்து தொங்கும் ஒரு சாயம் போன நிக்கரும், பொத்தான் இல்லாத சட்டையோடு நிற்கும் தன் இரண்டாவது பாலகனைப் பார்த்தாள்.

பெரியவா கேட்ட கேள்விக்கு, சிரிப்பைத் தவிர அவளால் வேறு பதில் சொல்ல முடியவில்லை.

மிகவும் யதார்த்தமாக தெய்வத்தை மனஸில் catch பண்ணிக் கொண்டாள்.

அவளுடைய பதில் இனி எதற்கு?

அனுக்ரஹம் பரிபூர்ணம் !

அவளுக்கு பெரியவாளை பிடித்துக் கொள்ளத் தெரிந்துவிட்டது. அது போதாதா?

“எதற்காக இப்படிக் கேட்டார்?” என்றெல்லாம் கூட, அவள் மனஸை குழப்பிக் கொள்ளவேயில்லை.

( எல்லாத்தையும் படித்து, கேட்டு, அலசி ஆராயும் அறிவாளிகளான நாம்தான் குழப்பத் திலகங்களாக இருப்போம்)

தினமும் குளித்துவிட்டு, கற்பூரத்தை ஏற்றி ஸூர்யனுக்கு காட்டுவாள். அவளுடைய மனஸு முழுவதையும் பெரியவா ஆக்ரமித்திருந்தார்.

பெரியவாளுடைய ஒரு படம் கூட அவளிடம் கிடையாது.

அந்த ‘மஹாஸாமி’யை படத்தில் வைத்துப் பூஜிக்கக் கூட தனக்கு அருகதை கிடையாது என்று எண்ணினாள்.

எந்த பெரிய பக்தருக்கும் தோன்றாத எண்ணமாக, எங்கும் வ்யாபித்த பெரியவாளை, பரந்து விரிந்த ஆகாஶத்தில், ஒளிப்பிழம்பாய் தோன்றும் ஸூர்யனாகக் ஆராதிக்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தாள்.

அவள் வாழ்வில் படிப்படியாக கஷ்டங்கள் குறைந்தன.

25 வருஷங்களுக்குப் பிறகு ரதயாத்ரையாக வந்த பெரியவா விக்ரஹத்தை, பெரியவா நேரிலேயே வந்தது போல் தர்ஶித்து பேரானந்தம் அடைந்தாள்.

“பெரியவங்க நம்மை விட்டுட்டு எங்கயும் போகலீங்க! அப்டி நெனைக்கறவங்க, அந்த தெய்வத்தைப் புரியாதவங்க! இந்த ரதத்துல… அவரு மெய்யாலுமே வந்திருக்காருன்னு நா… நிச்சியமா சொல்லுவேன்”

25 வர்ஷங்களுக்குப் பிறகு, இப்போதும் அவள் பக்கத்தில் அவளுடைய 27 வயஸு நிறைந்த அதே இளைய மகன் நின்றிருந்தான்!

“ஒன்னோட ரெண்டாவது பிள்ளை, டெல்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?”….

25 வர்ஷங்களுக்கு முன்பு, பெரியவா விளையாட்டு போல் கேட்ட போது, அப்போதும் அவளுடைய ரெண்டே வயஸான மகன், மூக்கை உறிஞ்சியபடி, மலங்க மலங்க பார்த்துக் கொண்டு, அவளுடைய புடவை தலைப்பை பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்!

அதே மகன்தான்!…. இன்று லீவில் ஊருக்கு வந்திருந்தான்….

“டில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறான்”

“பெரியவா எனும் அம்ருத ஸாகரம், குறிப்பிட்ட ஒரு ஸாராருக்குத்தான்!” என்ற பொய்யை, மஹாப் பொய்யென்று நிரூபித்தவர்களில், அஞ்சலையும் ஒருத்தி!

இவ்வளவு தூரம் பெரியவாளை க்ரஹித்துக் கொள்வதற்கு அவளிடம் போலித்தனமோ, படாடோபமோ இல்லாத அமைதியான நம்பிக்கை மட்டுமே இருந்தது!

ஸூர்யனின் ஒளிக்கு உயர்வு-தாழ்வு பேதங்களே இல்லை. அந்த ஒளியை க்ரஹித்து கொள்ளுவதும், தள்ளுவதும் நம்முடைய கர்மபலனே!

ஆனால், கர்மபலன் மேல் பழியை போடாமல், மனஸார துளியாவது நம்பிக்கையோடு பகவானிடம் அன்பு பூண்டால் போதும்!

Where there is Faith; there is no Fate! என்று அந்த பகவானே திருவாக்கு மலர்ந்திருக்கிறான்.

ஆம்! அவன் மேல் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையால், நம் விதி இறந்து போகும்!



Categories: Devotee Experiences

4 replies

  1. Great reading, great incidence to prove that Maha Periyava is with us all for eternity. We need to worship him with sincere devotion and efforts everyday in our life. P.S: It took me sometime to understand the ‘Sanskritised’ Tamil in the above narration. But I thoroughly enjoyed it. Hara Hara Sankara, Jaya Jaya Sankara

  2. 1984…Periyava’s darshan….after 25 yrs…..Mahapriyava attained sidhi in 1994

    • Means : Maha Periyava vigraha yatrai must have happened in 2009 ( 1984 +25) as witnessed by this bhakthai. Why should we think about 1994(Periyava siddhi year) in this context.

      • I think the message for all of us is “Periyava Baku poi aagathu” (Periyava word never fails or if Periyava says something it will happen). Leave the year, location etc – they dont matter. Or even if the whole incident is a fabricated one. It still a great message for all of us.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading