Thanks to Sri Hariharan for the share….Each incident is a great learning for us all….Periyava Periyavaathaan!
பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்ட ஶாஸ்த்ரிகள் ஒருவருக்கு புஷ்கரம் என்று சொல்லப்படும் புண்யக்ஷேத்ரத்தில் 45 நாட்கள் க்ருஷ்ணா நதியில் நீராடும்பாக்யம் அதுவும் பெரியவாளோடு நீராடும் மஹா மஹா பாக்யம் கிடைத்தது!
பெரியவா தினமும் ஸூர்யோதயத்துக்கு முன்னால் முகாமிலிருந்து கிளம்பி வாய்க்கால் ஒன்றைப்படகில் கடந்து க்ருஷ்ணா நதி தீரத்துக்கு வந்து ஸ்நானம் அனுஷ்டானம் முடித்துக் கொண்டு திரும்புவார். அவரோடு செல்லும் பக்தர் குழாமில் ஶாஸ்த்ரிகளும் ஒருவர். [அந்தக் காலங்களை கற்பனையில் மட்டும் தான் இப்போது நினைக்க முடியும்]
தினமும் பெரியவா செல்லும் வழியில் ஏராளமானபக்தர்கள் பழங்கள், புஷ்பங்கள், ரூபாய் நோட்டுகள் என்று காணிக்கை செலுத்துவார்கள். சிலர் பணத்தை பெரியவாளுடைய திருப்பாதங்களில் போட முந்திக்கொள்ளும் போது ஶாஸ்த்ரிகள் டக்கென்று ஒரு மரத்தாலான தட்டை நீட்டி விடுவார். பணம் அதில் விழும்.
காரணம்?
பணம் போடும் போது பெரியவாளை யாரும் தொட்டுவிடக்கூடாதே என்ற ஆதங்கம்.
தட்டு முழுக்க தினமும் பணம் விழுந்தது. கடைசி நாள் ஸ்நானமும் முடிந்தது. “பெரியவா தினமும் புண்ய ஸ்நானம் பண்ணப்போறச்சே எல்லாருக்கும் தர்ஶன பாக்யமும் பெரியவாளோட புண்ய நதில ஸ்நானம் பண்ற பாக்யமும் சேர்ந்து கெடைக்கறது… “ஶாஸ்த்ரிகள் பெரியவாளிடம் சொன்னார்.
“ஆமா… நீ தட்டை நீட்டி காஸு வாங்கற! அதுல காஸு போடறதால அவாளுக்கு புண்யம்… ஆனா அந்தக் காஸை வாங்கிக்கறதால நீ பாவத்தை சொமக்கறே! செரி… இந்த பணத்தை என்ன பண்ணப்போறே?… ஶாஸ்த்ரிகளுக்கு தூக்கி வாரிப் போட்டது! என்ன பண்ணப் போறேனா? காசை மடத்துக்கு தான் குடுக்கப் போறேன்… பெரியவா! கஜானாகிட்ட குடுத்துடுவேன்… ”
“இந்தப் பணம் மடத்துக்கு வேண்டாம்.” கண்டிப்பான குரலில் மறுத்தார்.
அவ்வளவு தான்! ஏதோ பற்ற வைத்த பயங்கர வெடிகுண்டை கையில் தாங்கியிருப்பவர் போல் க்ஷணத்துக்கு க்ஷணம் பாவத்தை சுமக்கிறோம் என்ற பயம் ஶாஸ்த்ரிகள் மனஸில் கனத்தது. பின்ன… மொத்தப் பணத்தையும் க்ருஷ்ணா நதிலபோட்டுடவா பெரியவா?
விட்டால் பயத்தில் அவரே பணத்தோடு நதியில் குதித்து விடுவார் போலிருந்தது.
“வேண்டாம்…இதோ! வழி நெடுக பிச்சைக்காரா இருக்காளே!அவாளுக்கு போட்டுடவா? வேலை எதுவும் செய்யாம சோம்பேறிகளா இருக்கற பிச்சைக்காராளை ஆதரிக்கவே கூடாது!…” என்றவர் கண்களை சுழல விட்டார். இறுதியில்… ஒருவர் மேல் பெரியவாளுடைய பார்வை பட்டது. ஆஹா! வேதாத்யாயனம் பண்ணிய ஒரு கனபாடிகள் தான் அந்த பாக்யசாலி!
காதில் குண்டலம் அணிந்திருந்தார். பெரியவா அழைத்ததும் ஓடி வந்தார். அழகான தெலுங்கில் அவருடைய அங்கவஸ்தரத்தை விரித்துப் பிடிக்கச் சொல்லி “இந்தா.. அத்தனை பணத்தையும் இவரோட வஸ்த்ரத்ல கொட்டு!… “என்றார்.
அப்பாடா! நிம்மதியான மனஸுடன் கொட்டினார் ஶாஸ்த்ரிகள்! கனபாடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய க்ருஹத்துக்கு சென்று ஆஸிர்வதித்து விட்டு முகாமுக்கு வந்தார்.
“புண்ய நதிகள்ள ஸ்நானம் பண்ணப் போனா தீர்த்தக்கரைல பணம் வாங்கறது நிஷித்தம்! அதுனால தான்அந்தப் பணம் மடத்துக்கு வேணாம்..ன்னுசொன்னேன். ஏன்னா… பணம் குடுக்கறவா எந்த எண்ணத்தோட போடறாளோ?… யாருக்குத் தெரியும்? அவா மனஸ்ல நெனைச்சபடி அந்தப் பணம் உபயோகமாறதா…ன்னும் தெரியாது… இப்போ நீ பணம் குடுத்தியே… அவர் நெறையயாக யக்ஞாதிகள் பண்ணறவர்… இன்னும் நெறைய பண்ணப் போறார்… இந்தப் பணம் யாகத்ல… அக்னில ஆஹூதி பண்ணறதுக்கான த்ரவ்யங்கள் வாங்கறதுக்கு ஒதவும். அக்னி பகவான்ஆஹூதினால ப்ரகாஸிப்பார்… அதுஸூக்ஷ்மம்…ன்னு பகவான் கதையில் சொல்லியிருக்கார்…”என்று அழகான விளக்கம் கொடுத்தார்.
அற்ப சொற்ப பணமானாலும் கோடி கோடி பணமானாலும் ஶாஸ்த்ர விரோதம் என்றால் பாபம் என்றால் தன்னை அது தீண்ட முடியாது என்பதை வாழ்ந்து காட்டியவர் பெரியவா. அதோடு இந்த ஸம்பவத்தால் நிஜமாகவே நித்ய அத்யயனத்தால் தங்கள் மனஸிலும் நாவிலும் க்ருஹத்திலும் வேதமாதா நர்த்தனமாடும் வேத ப்ராஹ்மணர்கள் எத்தனை உத்க்ருஷ்டமானவர்கள்! என்பதையும் த்யாகஶீலர்களான அவர்களுக்கு நாம் ஸமர்ப்பிக்கும் எப்பேர்ப்பட்ட பாவப்பட்ட காஸும் அவர்களுடைய வேதாக்னியால் புனிதமாக்கப்படும் என்பதையும் பெரியவா நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
வேதத்தை நித்ய ஜீவனோபாயமாக வைத்து கொண்டிருக்கும் உண்மையான வேதப்ராஹ்மணர்களுக்கு மட்டும் நாமும் [வேதம்படிக்காமல் ப்ராஹ்மணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம்], மற்றவர்களும் அந்தப்ராஹ்மணர்களின் முகம் அந்தஸ்து குணம் குறை பேச்சு எதையுமே பார்க்காமல் அவர்களிடம் உள்ள வேத மாதாவை மட்டும் கண்டு அவளுக்காக அவர்களுக்கு த்ரவ்யஸஹாயம் செய்வதை முக்யமான கடமையாகவே கொள்ள வேண்டும்.
இதில் இன்னொரு அழகான அனுக்ரஹம் என்னவென்றால் ஸாதாரணமாக பெரியவா மனஸில் என்ன அபிப்ராயம் என்பதை யாராலும் கண்டு பிடிக்கவே முடியாது. முதல் நாளே மரத்தட்டில் காஸை வாங்கும் போதே பெரியவா அந்த ஶாஸ்த்ரிகளை வாங்காதே! என்று தடுத்திருக்கலாம். பெரியவா அப்படி தடுத்திருந்தால் 45 நாட்கள் அந்தத் தட்டில் விழுந்த காசை போட்டவர்களுடைய பாபங்கள் அப்படியே இருந்திருக்கும். இப்போது அவர்களுடைய பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தம் கிடைத்து விட்டது. அதே போல் ஶாஸ்த்ரிகளுக்கும் வெடிகுண்டை கையில் தாங்கியிருக்கும் பதைபதைப்பு உண்டாகியிருக்காது. நமக்கும் பெரியவா சொல்லும் ஆயிரம் உபதேஸத்தில் பத்தோடு பதினொண்ணாக இதுவும் கிடப்பில் போயிருக்கும். அனுபவம் கற்றுத் தரும் பாடத்தை உபதேசம் கற்றுத் தராது.
Categories: Devotee Experiences
Leave a Reply